
முடிவுக்கு வரும் பிரபல சீரியல் : கிளைமாக்ஸை ரசிகர்களிடம் ஒப்படைத்த தயாரிப்பு குழு
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறந்த தொடர்களில் ஒன்று "யாரடி நீ மோகினி". பேய் கதாபாத்திரத்தை நுழைத்து அதே சமயம் குடும்பத்தொடராகவும் ரசிக்க வைக்கும் வகையில் இதன் கதை அமைப்பு இருந்ததே இந்த தொடரின் வெற்றிக்கு காரணம் என கூறலாம். அன்மையில் 1200-வது எபிசோடை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த தொடரின் கிளைமாக்ஸ் எப்படி இருக்க போகிறது? என ரசிகர்கள் ஒருபுறம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க, கிளைமாக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதை ரசிகர்களே முடிவு செய்யட்டும் என சீரியலின் தயாரிப்புக் குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளிவந்த புரோமோவில், ரசிகர்களுக்கு மூன்று ஆப்ஷன்களை கொடுத்துள்ளது. சீரியலின் வில்லி கதாபாத்திரமான ஸ்வேதா மன்னித்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா? அல்லது வெண்ணிலாவால் பழிவாங்கப்பட வேண்டுமா? அல்லது சித்ராவின் ஆவியினால் பழிவாங்கப்பட வேண்டுமா? என மூன்று ஆப்ஷன்களை ஆடியன்ஸூக்கு கொடுத்துள்ளது.
இதில் அதிகமாக ஓட்டு வாங்கும் கிளைமாக்ஸை படமாக்கி ஒளிபரப்ப சீரியல் தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே கிளைமாக்ஸை ரசிகர்களிடம் கொடுக்கும் முதல் சீரியல் குழு "யாரடி நீ மோகினி" குழு தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் ஆதரவை பெற்ற சீரியல் விரைவில் முடிய போவதை நினைத்து ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இருந்தாலும் இந்த புதிய முயற்சியில் ரசிகர்களின் கிளைமாக்ஸ் என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போமே.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!