ADDED : மார் 24, 2025 04:10 AM
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் 7 வார தண்ணீர் தினத்தின் நிறைவு விழா நடந்தது.
புதுச்சேரியில் உள்ள தொண்டு நிறுவனங்கள் சார்பில் உலக ஈர நிலங்கள் தினத்தை முன்னிட்டு 7 வார தண்ணீர் திருவிழா கடந்த மாதம் 2ம் தேதி துவங்கி நடந்து வந்தது. அதில், தொடர் பயிற்சி பட்டறை, கருத்தரங்கு உள்ளிட்ட பல்லுயிர் பெருக்கம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
அதன் நிறைவு விழா கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவிற்கு, கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ், சுற்றுச்சூழல் பொறியாளர் காளமேகம் வாழ்த்தி பேசினர்.
விழாவில், ஈர நிலங்கள் பாதுகாப்பு முயற்சியில் ஈடுபட்ட, பாகூர் பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகருக்கு, 'ஈர நில சாம்பியன்' பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக, ஆயிகுளம் என்ற கருப்பொருள் தெரு நாடகம் நடந்தது.
தொடர்ந்து, புதுச்சேரி குளங்களின் பல்லுயிர் பெருக்கம், நீர்வாழ் மற்றும் நீர் ஆகாயத்தாமரை கொண்டு தயார் செய்யப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது. மேலும், தெரு நாடக கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், ஆகாய தாமரை பயிற்சியாளர்கள் கவுரவிக்கப் பட்டனர்.