Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு டில்லியில் நேரு எம்.எல்.ஏ., போராட்டம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு டில்லியில் நேரு எம்.எல்.ஏ., போராட்டம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு டில்லியில் நேரு எம்.எல்.ஏ., போராட்டம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு டில்லியில் நேரு எம்.எல்.ஏ., போராட்டம்

ADDED : ஜூன் 28, 2025 07:10 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொது நல அமைப்பினர் டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்தாலும், சட்டசபை இருந்தாலும் முழு அதிகாரமும் கவர்னர், அதிகாரிகளிடம் தான் குவிந்து கிடக்கிறது.

மக்கள் நலத்திட்டங்களுக்காக ஆட்சியாளர்கள் எந்த முடிவு எடுத்தாலும், கவர்னர், அதிகாரிகள் சாதாரணமாக திருப்பி அனுப்பிவிட முடியும்.

மற்ற மாநிலங்களை போன்று சட்டசபை இருந்தாலும் எல்லாமே பெயரளவிற்கு தான். சட்டங்களை இயற்ற கூட அதிகாரம் இல்லை. அந்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.

எனவே, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு இதுவரை 16 முறை சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இக்கோரிக்கைக்கு இதுவரை மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு தலைமையில் பல்வேறு பொதுநல அமைப்புகள் ஒன்று சேர்ந்து, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளனர்.

முதற்கட்டமாக புதுச்சேரியில் முதல்வர் ரங்க சாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்பட 1 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இரண்டாம் கட்டமாக மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக டில்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்து, டில்லி புறப்பட்டு சென்றனர்.

திட்டமிட்டப்படி நேற்று, டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேரு எம்.எல்.ஏ., தலைமையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கோரிக்கை பதாகையை ஏந்திய பொது நல அமைப்பினர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், புதுச்சேரி மக்கள் கையெழுத்திட்ட மனுவுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

போராட்டத்தின் போது பஹல்காம் தீவிரவாத தாக்குதல், குஜராத் விமான விபத்தில் உயர் நீத்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் அனுவலகத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு கோரிக்கை மனுவை அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us