ADDED : மார் 22, 2026 05:44 PM

புதுச்சேரி: உல்லாஸ் திட்டத்தின் கீழ் கல்வி பயின்றவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வு நேற்று நடந்தது.
புதுச்சேரி மாநிலத்தை 100 சதவீத கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் பொருட்டு, மாநில எழுத்தறிவு மையம் சார்பில், மத்திய அரசின் நிதியுதவியுடன் உல்லாஸ் திட்டம் துவங்கப்பட்டு, 15 வயதிற்கு மேற்பட்டோர் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி பயின்று வருகின்றனர்.
இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆறு மாதங்களாக கல்வி பயின்றவர்களுக்கான 'அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வு' நேற்று நடந்தது.
புதுச்சேரியில் 134 மையங்களில் 1,371 பேரும், காரைக்காலில் 46 மையங்களில் 345, ஏனாமில் 15 மையங்களில் 690 பேரும் தேர்வு எழுதினர்.
காரைக்காலில் நடந்த தேர்வினை பள்ளிக்கல்வி இயக்குநர் சிவக்குமார், சாரம் அரசு தொடக்க பள்ளியில் நடந்த தேர்வினை, சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, திட்டத்தின் நோடல் அதிகாரி சுகுணா சுகிர்தபாய், பள்ளி துணை ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் 'கற்றவர்' என்ற சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறலாம்.
