/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரெஞ்சு ஆட்சி முதல் கோலோச்சும் தலைமை செயலகம் பிரெஞ்சு ஆட்சி முதல் கோலோச்சும் தலைமை செயலகம்
பிரெஞ்சு ஆட்சி முதல் கோலோச்சும் தலைமை செயலகம்
பிரெஞ்சு ஆட்சி முதல் கோலோச்சும் தலைமை செயலகம்
பிரெஞ்சு ஆட்சி முதல் கோலோச்சும் தலைமை செயலகம்
ADDED : மே 31, 2025 11:43 PM

தமிழகத்தை போன்று புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்தாலும் உச்சக்கட்ட அதிகாரம் கவர்னரிடம் தான் உள்ளது.
புதுச்சேரியில் சட்டசபை இருந்தாலும் யூனியன் பிரதேசமாக இருப்பதால் ஆட்சியாளர்கள் கேபினெட்டில் மக்கள் நலனுக்காக முடிவெடுத்து அனுப்பும் கோப்பிற்கு சிம்பிளாக கவர்னர் மறுப்பு சொல்லி நிராகரித்து திருப்பி அனுப்பிவிட முடியும். இல்லையெனில், உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி திசை திருப்பிவிடவும் முடியும்.
கவர்னர் - முதல்வர் அதிகார மோதலுக்கு இடையே மோதல் ஒரு பக்கம் இருந்தாலும் உண்மையான அதிகாரம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கொண்ட தலைமை செயலகத்தில் தான் குவிந்து கிடப்பது நிதர்சன உண்மை.
வங்க கடல் ஆர்ப்பரிப்பிற்கு இடையே புதுச்சேரி கடற்கரையோரம் அதிகாலை சூரியனை பார்த்தபடி பல தளங்களுடன் பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் தலைமை செயலக கட்டடத்திற்கும் நான்கு நுாற்றாண்டு வரலாற்று பின்னணி உண்டு. ஆரம்ப காலத்தில் அதாவது 1770ம் ஆண்டில் விடுதி கட்டடமாக தான் தனது முதல் அத்தியாயத்தை தலைமை செயலகம் துவங்கியது.
இன்றைய தலைமை செயலகத்தின் மேற்கு பகுதியில் இந்த பிரமாண்டமான விடுதி கட்டடம் அமைந்திருந்தது. அந்த கட்டடத்தின் பிரமாண்டம், காணும் கண்களின் புருவங்களை வியப்பில் உயர்த்தாமல் விட்டதில்லை.
1778ம் ஆண்டு பிரெஞ்சியர்களின் கண்ணும் இந்த கட்டடத்தின் மீது பட்டது. அந்தே ஆண்டு பிரெஞ்சியர்கள் இக்கட்டடத்தை அரசுடமை ஆக்கி, தோட்டத்துடன் கூடிய அரசு கட்டடமாக கட்டி விரிவுபடுத்தினர்.
இப்படி தான் முதலில் தலைமை செயலக கட்டடம் அரசின் கைக்கு வந்து சேர்ந்தது.
அப்படியே அக்கட்டடத்தை நிர்வாக அலுவலகமாக மாற்றிய பிரெஞ்சியர்கள் ஆட்சி புரிந்தனர். பத்து ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், 1788ம் ஆண்டில் நீதி மற்றும் நிர்வாக தலைமை அலுவலகமாக மாறி ஆதிக்கம் செலுத்தியது.
அதன் பிறகு திடீர் மாற்றம். 1816ம் ஆண்டில் பிரெஞ்சிந்திய போலீஸ் தலைமை அலுவலகமாக மாற்றி சட்ட ஒழுங்கினை கவனம் செலுத்தியது. அப்படியே அரை நுாற்றாண்டு கடந்த விட்ட நிலையில் பிரெஞ்சியர்கள் மீண்டும் இக்கட்டடத்தை நிர்வாக கட்டடமாக மாற்றலாம் என, முடிவு செய்தனர்.
இதனால் 1864ம் ஆண்டு உள்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாக அலுவலகமாக மாற்றப்பட்டது. 200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று பின்னணி கொண்ட தலைமை செயலக கட்டடம் இன்றைக்கும் அதே பவருடன் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்துவது வியப்பும் தான்.
புதுச்சேரி அரசு புதிய தலைமை செயலகத்துடன் கூடிய சட்டசபை கட்டுவதில் முனைப்பாக உள்ளது.
இனி, தலைமை செயலகம் கடற்கரை சாலையில் இருக்குமா அல்லது தட்டாஞ்சாவடியில் ஒருங்கிணைந்த சட்டசபை வளாகத்தில் குடிபோகுமா என்பது காலத்தில் கையில் தான் உள்ளது.