/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பார்வையாளர்களை கவர்ந்த மலர், காய், கனி கண்காட்சிபார்வையாளர்களை கவர்ந்த மலர், காய், கனி கண்காட்சி
பார்வையாளர்களை கவர்ந்த மலர், காய், கனி கண்காட்சி
பார்வையாளர்களை கவர்ந்த மலர், காய், கனி கண்காட்சி
பார்வையாளர்களை கவர்ந்த மலர், காய், கனி கண்காட்சி
ADDED : பிப் 10, 2024 06:24 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் துவங்கிய மலர், காய் மற்றும் கனி கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் வேளாண் விழா -2024 மற்றும் 34வது, மலர், காய்கறி, கனி கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் நேற்று மாலை துவங்கியது. விழாவிற்கு, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
கண்காட்சியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அரசு செயலர் ஜெயந்த குமார் ரே, தோட்டக்கலைத்துறை இயக்குநர் வசந்த குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
கண்காட்சியில், மலர் செடிகள், கொய் மலர்கள், அலங்கார தாவரங்கள், மலர் அலங்காரங்கள், காய்கறி வகைகள், பழ ரகங்கள், மூலிகை தாவரங்கள், சிறு தானியங்கள் இடம் பெற்றுள்ளன.
இதில், மலர், காய், கனிகள், பலவகையான தோட்டங்கள், கொய் மலர்கள், மலர் மற்றும் தானிய ரங்கோலி, மலர் அலங்காரங்கள் உள்ளிட்ட, 9 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், உழவர்கள், உள்ளிட்ட 498 பேர் பங்கேற்றுள்ளனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன.
புதுச்சேரி சார் அரசுத்துறைகள், காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம், ஜவஹர்லால் நேரு வேளாண் அறிவியல் கல்லுாரி, தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் ஆராய்ச்சி நிலையங்கள், பல்வேறு கல்லுாரிகளின் செயல்பாடுகள் பற்றிய அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
மலர்ப்படுக்கை, புல்வளாகத்தில் மலர்களின் அணிவகுப்பு, பாரத மாதா சிலை, இசை நடன நீரூற்று, சிறுவர் உல்லாச ரயில் ஆகியவை உள்ளன. பல்வேறு வேளாண் மற்றும் தோட்டக்கலை உபகரணங்கள், பழம் மற்றும் காய்கறி நாற்றுகள், உரங்கள், ஆகியவற்றின் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விழாவில், காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் அறிவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காரைப் பகுதிக்கு ஏற்ப உருவாக்கியுள்ள கே.கே.எல் (ஆர்) 2 என்ற நெல் ரகம் வெளியிடப்பட்டது. இன்றும், நாளையும் காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடக்க உள்ளது. அனுமதி இலவசம்.