/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி: ஏனாமில் உறவினர்கள் போராட்டம்நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி: ஏனாமில் உறவினர்கள் போராட்டம்
நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி: ஏனாமில் உறவினர்கள் போராட்டம்
நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி: ஏனாமில் உறவினர்கள் போராட்டம்
நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி: ஏனாமில் உறவினர்கள் போராட்டம்
ADDED : ஜன 31, 2024 07:31 AM

புதுச்சேரி : ஏனாமில் அரசு நீச்சல் குளத்தில் மூழ்கி ஒன்றாம் வகுப்பு மாணவர் இறந்ததையடுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியம், ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே அமைந்துள்ளது. ஏனாம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சூரிமுள்ளி ராஜி. மீனவர். இவரது மனைவி ஷியாமளா. இவர்களின் மூத்த மகன் சாய் ரோகித், 7; இளைய மகன் கேசவ் சசி, 5; சாய்ரோகித் அகரஹாரம் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்தார்.
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சாய் ரோகித் சென்று வருவது வழக்கம். நேற்று மதியம் 1:45 மணி தாண்டியும் சாய்ரோகித் வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த ஷியாமளா தேடினார்.
அப்போது, பள்ளி அருகே உள்ள பாலயோகி விளையாட்டு மைதானம் நீச்சல் குளத்தில் சிறுவன் ஒருவன் மூழ்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. ஷியாமளா மற்றும் உறவினர்கள் செல்வதற்குள் நீச்சல் குள பராமரிப்பாளர் குளத்தில் மூழ்கி கிடந்த சாய் ரோகித்தை துாக்கி கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால், சாய்ரோகித் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
நீச்சல் குளத்தில் மாணவர் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் தள்ளி விட்டு இறந்தாரா என்ற கோணத்தில் ஏனாம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே பள்ளி மாணவர் இறந்த தகவலறிந்த ஏனாம் மண்டல நிர்வாகி முனுசாமி, மருத்துவமனை மற்றும் நீச்சல் குளத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
சிறுவனை இழந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், நீச்சல் குள பராமரிப்பாளரின் கவனக்குறைவால் சிறுவன் இறந்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மண்டல நிர்வாகி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று கலைந்து சென்றனர்.