Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி ரூ.2.30 கோடி மோசடி; 2 பெண்கள் கைது

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி ரூ.2.30 கோடி மோசடி; 2 பெண்கள் கைது

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி ரூ.2.30 கோடி மோசடி; 2 பெண்கள் கைது

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி ரூ.2.30 கோடி மோசடி; 2 பெண்கள் கைது

ADDED : செப் 19, 2025 03:29 AM


Google News
புதுச்சேரி: கால் சென்டர் நடத்தி, குறைந்த வட்டிக்கு லோன் பெற்றுத் தருவதாக கூறி புதுச்சேரி, தமிழகத்தில் பலரிடம் 2.30 கோடி ரூபாய் மோசடி செய்த சென்னையை சேர்ந்த 2 பெண்களை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, திருக்கனுாரை சேர்ந்தவர் சங்கர். இவரை, 2 மாதத்திற்கு முன் மொபைல் போனில் தொடர்பு கொண்ட பெண், பிரபல வங்கியில் இருந்து பேசுவதாகவும், குறைந்த வட்டியில் 50 ஆயிரம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று தருவதாக கூறினார்.

அதனை நம்பிய சங்கர், கடன் பெற ஆதார், பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைத்தார். பின், தொடர்பு கொண்ட அந்த பெண், 10 லட்சம் ரூபாய் கடன் பெற தகுதி உள்ளதாகவும், செயலாக்க கட்டணம் 71 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறினர். அதனை சங்கர், பல தவணைகளில் செலுத்தியுள்ளார். அதன்பிறகு, அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர்.

அதில் கிடைத்த தகவலின் பேரில், சென்னை ரெட் ஹில்ஸ் மற்றும் புழல் பகுதியில் 'நியூ கோல்டன் எண்டர்பிரைசஸ்' என்ற பெயரில் கால் சென்டர் நடத்தி குறைந்த வட்டிக்கு கடன் பெற்று தருவதாக கூறி மோசடி செய்து வருவது தெரிய வந்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று, போலி கால் சென்டர் நடத்தி பலரிடம் மோசடி செய்த சென்னை, வடகரை, எஸ்.எஸ்.பாபா நகர் மகேஸ்வரன் மனைவி சசிகலா பொன் செல்வி, 37; சென்னை, புழல், சக்திவேல் நகர் செல்வகுமார் மனைவி முனிராதா, 27; ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 42 சிம் கார்டுகள், 17 மொபைல் போன்கள், 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இவர்கள் கடந்த ஓராண்டாக போலி கால் சென்டர் மூலம் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பலரிடம் 2.30 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக புதுச்சேரியில் இதுவரை 50க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், மோசடி பணத்தில் சொகுசு கார்கள் வாங்கியும், ஊழியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் மற்றும் இன்சென்டிவ் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us