ADDED : ஜூலை 03, 2024 05:40 AM

நகருக்குள் தினம் உலா வரும் கனரக வாகனங்களால்...
முதல்வர், உள்துறை அமைச்சரின் நடவடிக்கை தேவை
நகர பகுதியில் காமராஜர் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி, காந்தி வீதி, புஸ்சி வீதி, திருவள்ளுவர் சாலை, கொசக்கடை வீதி, நீடராஜப்பர் வீதி, ரங்கப்பிள்ளை வீதி, பாரதி வீதிகளில் பகல் நேரத்தில் எந்த பக்கம் திரும்பினாலும், டாரஸ் லாரிகள், ஈச்சர் லாரிகள், மினி வேன்களை நிறுத்தி சரக்குகளை இறக்குகின்றனர்.
டிரைவர்கள் அலட்சியம்
மேலும், கனரக வாகனங்களை ஓட்டி வருகின்ற வெளியூர்களை சேர்ந்த டிரைவர்கள் யாரை பற்றியும் கவலைப்படாமல், உள்ளூர் போக்குவரத்து போலீசாரையும் மதிக்காமல் நடுரோட்டிலேயே மணி கணக்கில் வாகனத்தை நிறுத்தி சரக்கை ஏற்றி இறக்குகின்றனர். இதனால், அந்த நேரத்தில் இந்த சாலைகள் வழியாக டூ வீலர்கள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட இதர வாகனங்கள், செல்ல முடிவதில்லை.
புதுச்சேரி நகர பகுதிக்குள் சரக்கு இறக்க வரும் கனரக வாகனங்கள் இரவு 10:00 மணி முதல், அதிகாலை 6:00 மணிக்குள் சரக்குகளை இறக்கிவிட்டு, நகரத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மற்ற நேரத்தில் லாரிகளை மேட்டுப்பாளையத்தில் அரசு அமைத்து கொடுத்துள்ள கனரக வாகன முனையத்தில்(போக்குவரத்து நகரம்) நிறுத்தி வைக்க வேண்டும்.
ஆனால், நகருக்குள் வருவதற்கான நேரக் கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கிறது. மேட்டுப்பாளையம் கனரக முனையத்தில் ஒரே ஒரு லாரியை கூட நிறுத்துவது கிடையாது. எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் டிப்பர் லாரி, டாரஸ் லாரிகள், ஈச்சர் லாரிகள் நகர பகுதிக்குள் வலம் வருவதை போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வது இல்லை.
ஏற்கனவே நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் உச்சக்கட்டமாக உள்ளது. இதில், போக்குவரத்து மிகுந்த பகல் நேரத்தில் சின்னஞ்சிறிய சந்து பொந்துகளில்கூட லாரிகளை நிறுத்தி சரக்குகளை இறக்குகின்றனர்.
புதுச்சேரி மக்கள் மிகவும் அமைதியானவர்கள் என்பதால், லாரிகளால் ஏற்படும் டிராபிக் ஜாமை சகித்து கொண்டு கடந்து செல்கின்றனர். ஆனால், குறித்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ஒட்டுமொத்த புதுச்சேரியில் நிலவும் டிராபிக் பிரச்னைக்கு, சரக்கு ஏற்றி வரும் கனரக வாகனங்கள் தான் பிரதான காரணமாகும். ஏற்கனவே நிலவும் டிராபிக் பிரச்னையால், அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் எறும்புகள் போல வரிசையாக ஊர்ந்து செல்கின்றன.
நேரக் கட்டுப்பாடு இன்றி நகர பகுதிக்குள் வந்து செல்லும் லாரிகளால் தற்போது மேலும் டிராபிக் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தடுப்பது எப்படி?
லாரிகள் நகர பகுதிக்குள் வருவதை தடுக்க இ.சி.ஆர்., கோட்டக்குப்பம் சந்திப்பு, தட்டாஞ்சாவடி சிக்னல், இந்திரா சிக்னல், மரப்பாலம் சந்திப்பு ஆகிய இடங்களில் உள்ள போக்குவரத்து போலீசார் நகர பகுதிக்குள் செல்லும் லாரிகளை மடக்கி போக்குவரத்து முனையத்துக்கு அனுப்பினால் போதுமானது.
அரசு குறிப்பிட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டை மீறி உள்ளே வரும் கனரக வாகனங்கள் மீது போக்குவரத்து வாகன சட்டத்தின்படி, ரூ. 1000 அபராதம் விதிக்கலாம்.
ஆனால், நேரக் கட்டுப்பாட்டை மீறும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மீது அபராதம் விதிப்பதையே போக்குவரத்து போலீசார் மறந்து விட்டனர்.
எனவே, நகரப் பகுதியின் போக்குவரத்து பிரச்னைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ள, நேரக் கட்டுப்பாட்டை மீறும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு போக்குவரத்து போலீசாருக்கு தகுந்த வழிகாட்டுதல்களை போக்குவரத்து சீனியர் எஸ்.பி., எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும்.