ADDED : ஜூலை 04, 2024 03:19 AM
புதுச்சேரி : சென்னை தனியார் கம்பெனி ஊழியர் புதுச்சேரி ஓட்டல் அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை, திருவள்ளூர், ஆவடி கவரப்பேட்டை, கங்கையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சரவணன், 37; தனியார் கம்பெனி ஊழியர். கடந்த 30ம் தேதி புதுச்சேரி புஸ்சி வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அன்று இரவு 2:00 மணிக்கு, சென்னையில் உள்ள அவரது உறவினர் சத்தியசீலன் என்பவரின் மொபைல் போனுக்கு தனது குடும்பத்தை பார்த்து கொள்ளுமாறு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
சத்தியசீலன் வில்லியனுாரில் உள்ள உறவினர் சிவக்குமாரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். சிவக்குமார் தனியார் ஓட்டலுக்கு சென்று சரவணன் தங்கியிருந்த அறையை பார்த்தபோது, சரவணன் மின் விசிறியில் துாக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
ஒதியஞ்சாலை போலீசுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். போலீசார் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் மூலம் அறையை திறந்து சரவணன் உடலை மீட்டனர். இருதய நோய் மற்றும் கிட்னி பிரச்னையில் இருந்த சரவணன், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மனைவிக்கும் தகவல் தெரிவித்துள்ளார் என, தெரியவந்தது. ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.