Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் மீண்டும் தலைதுாக்கும் மணல் 'கொள்ளை'

செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் மீண்டும் தலைதுாக்கும் மணல் 'கொள்ளை'

செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் மீண்டும் தலைதுாக்கும் மணல் 'கொள்ளை'

செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் மீண்டும் தலைதுாக்கும் மணல் 'கொள்ளை'

ADDED : ஜூன் 16, 2024 05:41 AM


Google News
செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் மீண்டும் மணல் திருட்டு அதிகரித்து வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது.

விவசாயம் பாதிப்பு


புதுச்சேரி, செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றுப்படுகையில் சமூக விரோதிகள் மணலை அள்ளி புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளுக்கு கடத்தி சென்று விற்றனர். இதனால், சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது.குடிநீர் பற்றாக்குறையும்ஏற்பட்டது.

இதுதொடர்பாக விவசாய சங்கங்கள், பொதுமக்கள் அளித்த புகார்களின் பேரில், வருவாய்த் துறை மற்றும் போலீசார் இணைந்து செல்லிப்பட்டு, சுற்றியுள்ள சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

சங்கராபரணி ஆற்றுப் படுகைக்கு செல்லும் வழிகளில் பள்ளம் தோண்டி வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்தினர். மேம்பாலம் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பத்துக்கண்ணு பகுதியில் வருவாய்த்துறை மூலம் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, சி.சி.டி.வி., கேமராக்கள்பொருத்தி தீவிரமாக கண்காணித்தனர். இதன் காரணமாக மணல் திருட்டு ஓரளவு குறைந்தது.

ரோந்து பணி 'மிஸ்சிங்'


தற்போது பத்துக்கண்ணு பகுதியில் வருவாய்த்துறை மூலம் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி அகற்றப்பட்டு விட்டது. திருக்கனுார்போலீஸ்நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை காரணமாக செல்லிப்பட்டு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை.வில்லியனுார் போலீசாரும் ரோந்து பணிகளை குறைத்து விட்டனர்.

இதனால், மீண்டும் செல்லிப்பட்டு, வம்புப்பட்டு, விநாயகம்பட்டு, சோரப்பட்டு, பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சங்கராபரணி ஆற்றுப் படுகை மற்றும் அருகில் உள்ள விவசாய நிலங்களில் மணலை திருடி,புதுச்சேரி நகரம் மற்றும் தமிழக பகுதிகளுக்கு கடத்தி சென்று விற்கின்றனர்.

இரவு நேரத்தில் கடத்தல்


செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரையோர விவசாய நிலங்களில் செங்கல் சூளைகளுக்கு அழுக்கு மண் எடுப்பதாக வருவாய்த்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று, அனுமதித்த அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி எடுத்து வருகின்றனர்.

அழுக்கு மண்ணை எடுத்த பிறகு, அதன் கீழே உள்ள மணலை பொக்லைன் மூலம் கொண்டு வந்து, அதனை மறைவான இடத்தில் பதுக்கி வைத்து, இரவு நேரங்களில் டிப்பர் லாரிகள் மூலம் கடத்தி சென்று விற்கின்றனர்.

இதனிடையே,செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் தண்ணீரை தேக்கி வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பணையும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உடைந்ததால், ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாகவும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆற்றுப் படுகையில் மணலை கடத்தி வருகின்றனர். இதனை போலீசார் கண்டுகொள்வதில்லை.

செயற்கை இருள்


இதன் காரணமாக,மணல் திருட்டு தொடர்பான அப்பகுதியை சேர்ந்தவர்கள் இடையே மோதல் சம்பவங்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை அபாயம் உள்ளது.

மேலும், மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள், செல்லிப்பட்டு கிராமத்து வீதிகளில் உள்ள தெரு மின் விளக்குகளை உடைத்து செயற்கையான இருளை ஏற்படுத்துகின்றனர். இதனால், கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே, மணல் திருட்டை தடுக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் முன், பத்துக்கண்ணு பகுதியில் அகற்றப்பட்ட வருவாய் துறையின் சோதனைச் சாவடியை மீண்டும் அமைக்கவும், வில்லியனுார் போக்குவரத்து எஸ்.பி., அலுவலகம் மூலம் செல்லிப்பட்டு பகுதியில் 24 மணி நேரமும் போலீசார்ரோந்து பணியை தீவிரப்படுத்தவும்அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us