மூடப்படும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று இடத்தில் பணி வழங்க கோரிக்கை
மூடப்படும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று இடத்தில் பணி வழங்க கோரிக்கை
ADDED : மே 12, 2026 06:21 PM
கடலுார்: தமிழகத்தில், 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டதற்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கடலுாரில், சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளதை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வரவேற்கிறது. குறிப்பாக தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயங்கும், 717 கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பை உடனடியாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.
மூடப்படும் டாஸ்மாக் கடைகளால், அவ்வப்போது வெளியேற வேண்டிய பணியாளர்களுக்கு மற்ற கடைகளில் முன்னுரிமை அடிப்படையில் உடனுக்குடன் பணி வாய்ப்பு வழங்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்டு வெளியில் உள்ள பணியாளர்களை டாஸ்மாக் கடைகளில் பணியமர்த்த வேண்டும்.
கடந்த, 23 ஆண்டு காலமாக டாஸ்மாக் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத சூழல் தான் உள்ளது.
அரசு துறைகளில் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களில் கல்வி தகுதி அடிப்படையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும்.
அதனால், டாஸ்மாக் பணியாளர் சங்கங்களை அழைத்து பணியாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில ஆலோசகர் சரவணன், மாநில அமைப்பாளர்கள் அல்லிமுத்து, பாலமுருகன், மாவட்ட நிர்வாகிகள் கோபால்சாமி, காமராஜ், கருணாகரன், முத்துக்குமரன், இஷ்டலிங்கம், சக்திவேல் உடனிருந்தனர்.





