ADDED : ஜூலை 26, 2024 04:09 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நிபா வைரஸ் நோயை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
கேரளாவில் உள்ள மல்லபுரத்தில் 14 வயது சிறுவன் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், அவரை நிபா வைரஸ் தாக்கியது கண்டறியப்பட்டது. புதுச்சேரியில், இந்நோயை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
கோரிமேடு அரசு நெஞ்சக மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டு, இந்நோய்க்கான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நோயில் இருந்து, தற்காத்து கொள்ள பொதுமக்கள் கடிபட்ட பழங்கள் உண்ணுவதையும், பதநீர் போன்ற பனைமரத்திலிருந்து தயாரிக்கப்படும் பானகங்களை தவிர்க்க வேண்டும். மூளை காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து சமூக இடைவெளி விட்டு பழக அறிவுறுத்தினார்.
மூளை காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், பாதிக்கப்பட்டவருக்கு முகக்கவசம் அணிவித்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். இவ்வாறு, சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.