Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மேட்ரிமோனியில் பெண் தேடும் இளைஞர்களுக்கு 'குறி' பணம் பறிக்கும் சைபர் கிரைம் மோசடி கும்பல்

மேட்ரிமோனியில் பெண் தேடும் இளைஞர்களுக்கு 'குறி' பணம் பறிக்கும் சைபர் கிரைம் மோசடி கும்பல்

மேட்ரிமோனியில் பெண் தேடும் இளைஞர்களுக்கு 'குறி' பணம் பறிக்கும் சைபர் கிரைம் மோசடி கும்பல்

மேட்ரிமோனியில் பெண் தேடும் இளைஞர்களுக்கு 'குறி' பணம் பறிக்கும் சைபர் கிரைம் மோசடி கும்பல்

ADDED : ஜூலை 07, 2024 03:41 AM


Google News
மேட்ரிமோனியில் பெண் தேடும் புதுச்சேரி இளைஞர்களை குறி வைத்து சமீப காலமாக சைபர் மோசடி கும்பல் பணம் பறித்து வருகிறது.

சரியான வேலை கிடைக்காதது, போதுமான சம்பளம் இல்லாதது, குடும்ப சூழல் காரணமாக, திருமணம் செய்து கொள்ளுவதை இன்றைய இளைஞர்கள் தவிர்த்தும், தள்ளிபோட்டும் வருகின்றனர். 30 வயதிற்கு பிறகு மேட்ரிமோனியில் வரன்களை பதிவு செய்து பெண்களை தேடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் சரியான வரன்கள் கிடைக்காத போது, ஜாதி, மதம் தடையில்லை. பெண் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விடுகின்றனர்.

இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் புதுச்சேரி இளைஞர்களை சைபர் கிரைம் மோசடி கும்பல் குறி வைத்து பணம் பறித்து வருவதால் உஷாராக இருக்க வேண்டும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'அண்மையில் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மேட்ரிமோனியில் பதிவு செய்து வரன்களை தேடினார்.

அப்படி வரன்களை தேடும்போது அழகிய பெண்ணின் புகைப்படம் ஒன்று கண்ணீல் பளீச்சிட்டது. அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணிய அவர், பெண் கேட்பதற்காக அந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டார்.

மாப்பிள்ளையை பற்றி அனைத்தையும் விசாரித்த பெண் வீட்டாரும் மணப்பெண் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொண்டனர். நீங்கள் இருவரும் பேசி கொண்டால் தான், ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியும் என்று கூறி மணப்பெண்ணின் மொபைல் எண்ணையும் கொடுத்தனர். 'கூச்சப்படாமல் எங்க பெண்கிட்ட பேசுங்க மாப்பிள்ளை...' என்று ஜாலியாக சொல்லியுள்ளனர்.

அதை தொடர்ந்து இருவரும் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டு, திருமண கனவில் இரவு பகலாக மொபைலில் பேசி வந்தனர். எதிர்காலத்தை பற்றியும் திட்டமிட்டனர். அப்போது அப்பெண், எங்களது வீட்டில் 70 லட்சம் என்னுடைய பெயரில் போட்டுள்ளனர். நான் ேஷர் மார்க்கெட்டில் போட்டுள்ளேன். எவ்வளவு ரூபாய் லாபம் வந்துள்ளது தெரியுமா. நீ ஏன் ேஷர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய கூடாது? அப்படி செய்தால் தானே நமக்கு எதிர்காலத்தில் குடும்ப கஷ்டம் இருக்காது. நீ அந்த காலத்து ஆளாக இருக்கிறாய். உனக்கு ஏன் ேஷர் மார்க்கெட் பற்றி தெரியவில்லை. உனக்கு எனக்கும் எப்படி செட் ஆகும் என்று கேள்வி எழுப்பி, ேஷர் மார்க்கெட்டில் முதலீடு செய்த ஆவணங்களை அனுப்பியுள்ளார்.

இதனை கேட்ட இளைஞர், நல்ல லாபம் கிடைக்கிறது என்றால் நானும் முதலீடு செய்கிறேன் என்று கூறி, அப்பெண் அனுப்பிய லிங்கில் ேஷர் மார்க்கெட் டில் 36 லட்சம் முதலீடு செய்துள்ளார்.அதன் பிறகு அந்த பெண்ணின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதுபோன்று பல சம்பவங்கள் புதுச்சேரி இளைஞர்களை குறி வைத்து நடத்தி, சைபர் கிரைம் மோசடி கும்பல் பணம் பறித்து வருகிறது. மேட்ரிமோனியில் வரன் தேடும் புதுச்சேரி இளைஞர்கள் உஷாராக இருப்பது நல்லது' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us