Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவி? கூட்டணிக்கு 'குட் பை' சொல்லும் மூடில் ம.தி.மு.க.,

துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவி? கூட்டணிக்கு 'குட் பை' சொல்லும் மூடில் ம.தி.மு.க.,

துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவி? கூட்டணிக்கு 'குட் பை' சொல்லும் மூடில் ம.தி.மு.க.,

துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவி? கூட்டணிக்கு 'குட் பை' சொல்லும் மூடில் ம.தி.மு.க.,

ADDED : ஜூன் 20, 2025 05:13 AM


Google News
Latest Tamil News
ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோவுக்கு, மத்திய இணை அமைச்சர் பதவி வழங்க, பா.ஜ., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளதால், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, தே.ஜ., கூட்டணியில் ம.தி.மு.க., சேரும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:


கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க.,வுக்கு, 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில், 4 தொகுதிகளில், அக்கட்சி வெற்றி பெற்றது. தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டதால், அவர்கள் சட்டசபையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களாகவே உள்ளனர்.

கடந்த 2024 லோக்சபா தேர்தலில், திருச்சி தொகுதியில், 'தீப்பெட்டி' சின்னத்தில் போட்டியிட்டு, துரை வைகோ வெற்றி பெற்றார். லோக்சபாவில், அவர் ம.தி.மு.க., - எம்.பி.,யாக உள்ளார். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு, மீண்டும் ராஜ்யசபா 'சீட்' வழங்குவது தொடர்பாக, தி.மு.க.,விடம் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. ஆனாலும், மீண்டும் எம்.பி., பதவி கிடைக்கும் என, வைகோ எதிர்பார்த்தார்.

அவருக்கு பதிலாக, ம.நீ.ம., கட்சி தலைவர் கமலுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி தரப்பட்டதால், அவரும் அவரது கட்சியினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வரும் சட்டசபை தேர்தலில், இரட்டை இலக்கத்தில், 10 தொகுதிகளை பெற, ம.தி.மு.க., விரும்புகிறது. அப்போதுதான், அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த சட்டசபை தேர்தலை போல், 6 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தாமல், தீப்பெட்டி சின்னத்தில், ம.தி.மு.க., போட்டியிட, தி.மு.க., தரப்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர, மற்ற கட்சிகளில் எது வந்தாலும் தே.ஜ., கூட்டணியில் சேர்க்கலாம் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். அதன்படி, தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலர், வைகோவிடம் பேசி வருவதாக தெரிகிறது.

துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது குறித்தும், சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணியில் ம.தி.மு.க., இடம்பெறுவது குறித்தும், ஆந்திர தொழிலதிபர் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு உள்ளது.

சமீபத்தில், மத்திய அமைச்சர் முருகனும், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனும், 'தி.மு.க., கூட்டணியில் உள்ள ஒரு கட்சி, தே.ஜ., கூட்டணில் இடம்பெறும்' என, வெளிப்படையாக பேசியுள்ளனர். ம.தி.மு.க.,வை மையமாக வைத்தே, இருவரும் இதை கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில், வரும் 22ம் தேதி, ஈரோட்டில் ம.தி.மு.க., பொதுக்குழு கூடுகிறது. அதில் தி.மு.க., கூட்டணியில் நீடிப்பது குறித்து கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவிக்கக்கூடும் என தெரிகிறது.

கடந்த 2002ம் ஆண்டில், ஈரோடு பரிமளம் மஹாலில், மறைந்த முன்னாள் எம்.பி., கணேசமூர்த்தி தலைமையில் ம.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

அதில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றியதால், 'பொடா' சட்டத்தில் வைகோ கைது செய்யப்பட்டார். 23 ஆண்டுகளுக்குப் பின், அதே பரிமளம் மஹாலில், பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, கூட்டணி குறித்து முக்கிய முடிவை வெளியிட, வைகோ திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us