Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/இன்று முருக பக்தர்கள் மாநாடு: 5 லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் பாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

இன்று முருக பக்தர்கள் மாநாடு: 5 லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் பாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

இன்று முருக பக்தர்கள் மாநாடு: 5 லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் பாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

இன்று முருக பக்தர்கள் மாநாடு: 5 லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் பாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

UPDATED : ஜூன் 22, 2025 12:08 PMADDED : ஜூன் 21, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரையில் இன்று (ஜூன் 22) நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள 1.30 லட்சம் பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர். ஐந்து லட்சம் பேர் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே உள்ள மைதானத்தில் இன்று (ஜூன் 22) மதியம் 3:00 மணிக்கு முருக பக்தர்கள் மாநாடு நடக்கவுள்ளது. இதற்காக 8 லட்சம் சதுர அடி பரப்பளவில் உள்ள மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

மாநாட்டின் சிறப்பம்சமாக 5 லட்சம் பக்தர்கள் நேரடியாக பங்கேற்றுகந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் தற்போது தீவிரமடைந்துள்ளது. மாநாடு வளாகத்தில் 5 லட்சம் சதுர அடியில் பக்தர்கள் அமருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் இடையே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இரும்பு தடுப்புகள் மூலம் 50 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 2000 இருக்கைகளும், 1000 லிட்டர் தண்ணீர் டேங்கும் வைக்கப்படும். மாநாட்டிற்கு உள்ளே வரும் போது பக்தர்களிடையே நெரிசலை தவிர்க்கும் வகையில் மூன்று நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விரிவான பார்க்கிங் வசதி


கார்களில் வருவோருக்கு இரண்டு இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பஸ், வேன்களை நிறுத்த தனி பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை ஒருங்கிணைக்கவும், பக்தர்களை வழிநடத்தவும் 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநாடு மதியம் 3:00 தொடங்கி இரவு 8:00 மணிக்கு நிறைவடையும். மாலை 4:00 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடக்கும். மாலை 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும். இதற்காக மாநாடு வளாகம் முழுவதும் 18 எல்.இ.டி., திரைகள் அமைப்பதற்கான பணிகள் நடக்கின்றன. திரையை பார்த்து பக்தர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்பின் சிறப்பு விருந்தினர்களின் உரை இருக்கும். இதில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மடாதிபதிகள், ஹிந்து அமைப்பினர், பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இறுதியாக முருகன் கோயில்களை மேம்படுத்துவது, வழிபாட்டு உரிமையை பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

மாநாட்டுக்கு வரும் பக்தர்களை ஒருங்கிணைக்க 'கியூஆர்' குறியீடு வெளியிடப்பட்டது. இதன் மூலம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் நேற்று மதியம் வரை முன்பதிவு செய்துள்ளனர்; 5 ஆயிரம் வாகனங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய நீதிமன்ற உத்தரவுக்கு பின் இந்த எண்ணிக்கை இரு மடங்காகும் என ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதுபோல், முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்ளை ஒருங்கிணைக்கவும் மாநாட்டில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அதிகரிக்கும் கூட்டம்


முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் அருட்காட்சி ஜூன் 16 ல் திறக்கப்பட்டது. முதல் 3 நாள்களில் மட்டும் 30 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் காலை 3 ஆயிரம் பேர், மாலை 9 ஆயிரம் பேர் அறுபடை வீடுகளின் மாதிரியை தரிசனம் செய்தனர். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்தனர்.

மதியம் 1:00 மணி வரை வெயிலை பொருட்படுத்தாமல் சுமார் 5 ஆயிரம் பேர் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இன்றும், நாளையும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் வரிசையில் செல்ல கூடுதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக 20 சிற்றுண்டி கடைகள் செயல்பட்டு வருகின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us