Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ மத அடையாளம் பிற்போக்குத்தனமானது; அண்ணாமலைக்கு அமைச்சர் மகேஷ் பதில்

மத அடையாளம் பிற்போக்குத்தனமானது; அண்ணாமலைக்கு அமைச்சர் மகேஷ் பதில்

மத அடையாளம் பிற்போக்குத்தனமானது; அண்ணாமலைக்கு அமைச்சர் மகேஷ் பதில்

மத அடையாளம் பிற்போக்குத்தனமானது; அண்ணாமலைக்கு அமைச்சர் மகேஷ் பதில்

ADDED : ஜூன் 25, 2025 04:32 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''பள்ளிகளில் மத அடையாளங்களை வெளிப்படுத்த சொல்லும், அண்ணாமலையின் கருத்து மிகவும் பிற்போக்குத்தனமானது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

மதுரையில் கடந்த 22ம் தேதி, ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில், முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. இதில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

ஹிந்துக்களை பொறுத்தவரை, சிறிதாக யாராவாது தொந்தரவு செய்தால், பரவாயில்லை என்று கண்டுகொள்ள மாட்டோம். மன்னித்து விடுவோம். பெரிதாக தொந்தரவு செய்தாலும் கூட கண்டுகொள்ள மாட்டோம்.

இன்று, அதை எல்லாம் தாண்டி, நம் வாழ்வியல் முறைக்கு, தொடர்ந்து பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஹிந்து என்பதற்காக, கடைக்கோடி தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர்.

ஹிந்து மதத்தை பின்பற்றினால் மட்டும், நம் ஓட்டுகளை வாங்கும் அரசியல்வாதிகளாக, அதிகாரத்தில் இருப்பவர்கள், கோவில்களை அசிங்கப்படுத்துகின்றனர்.

ஹிந்து மக்களிடம் ஒற்றுமை எப்போதும் வராது என்ற தைரியத்தில், அரசியல்வாதிகள் பழைய அரசியலை செய்கின்றனர். அதை எல்லாம் உடைத்துக்காட்ட வேண்டும். கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

எங்களின் வாழ்வியல் முறையில், எந்த பிரச்னையும் வரக்கூடாது. எங்கள் குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றாலும், தைரியமாக திருநீறு வைத்துச் செல்ல வேண்டும்.

எங்கள் குழந்தைகள், வட மாவட்டங்களில் பள்ளி சென்றால்கூட ருத்ராட்சையை வெளியில் அணிந்து செல்ல வேண்டும். இவை எல்லாம் இன்று மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னையாக உள்ளது.

அதற்கு எல்லாம் தான் முருகர் மாநாடு தேவைப்படுகிறது. மதுரையில் இத்தனை பெரிய மாநாடு நடத்தப்பட்டதன் பின்னணியில் இருக்கும் காரணங்களில் இதுவும் முக்கியமானது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், அமைச்சர் மகேஷ் நேற்று சென்னையில் அளித்த பேட்டி:

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத அடையாளச் சின்னங்களுடன் பள்ளிக்கு செல்லும்படி, மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

எந்த மதமாக இருந்தாலும், அந்த அடையாளங்கள் இல்லாமல், அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், முன்னாள் முதல்வர் காமராஜர், சீருடை திட்டத்தை கொண்டு வந்தார்.

மீண்டும், மத அடையாளத்தை புகுத்துவது, மிகவும் பிற்போக்குத்தனமானது. பள்ளி, அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதுதான் முற்போக்குத்தனமானது. இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us