வீடியோ எடுத்த தமிழக போலீஸ்: கடும் கோபத்தில் அமித் ஷா
வீடியோ எடுத்த தமிழக போலீஸ்: கடும் கோபத்தில் அமித் ஷா
வீடியோ எடுத்த தமிழக போலீஸ்: கடும் கோபத்தில் அமித் ஷா

மத்திய
உள்துறை அமைச்சக வட்டாரங்களில் தமிழகம் குறித்த ஒரு சம்பவம் பரபரப்பாக
அலசப்படுகிறது. சமீபத்தில் டில்லி வந்த அ.தி.மு.க., தலைவரும் முன்னாள்
முதல்வருமான பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டில்
சந்தித்தார். பிறகு தன் காரில் வெளியே சென்ற போது, 'கர்சீப்'பால் தன்
முகத்தை மூடிக்கொண்டதாக ஒரு வீடியோ தமிழக மீடியாவில் வெளியானது.
இதுகுறித்து அமித் ஷாவிற்கு பாதுகாப்பு அளிக்கும் டில்லி போலீஸ், இந்த
வீடியோவை எடுத்தவர்கள் யார் என விசாரணை நடத்தியுள்ளனர். தமிழக போலீசின்
உளவுத் துறையினர்தான் வீடியோ எடுத்து மீடியாக்களுக்கு கொடுத்துள்ளனர் என
தெரியவந்ததாம். உடனே டில்லி போலீஸ் கமிஷனருக்கு விஷயம் சொல்லப்பட்டதாம்.
கமிஷனர் உடனே உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இந்த விபரங்களைத்
தெரிவித்தாராம். மத்திய உள்துறை அமைச்சர் வீட்டு வாசலில் ஏன் தமிழக
போலீசார் வந்தனர் என கேட்கப்பட்ட போது, பழனிசாமியின் பாதுகாப்பு
தொடர்பாகத்தான் வந்தோம் என பதில் சொல்லப்பட்டதாம். பாதுகாப்பிற்கு
வந்தவர்கள் எதற்கு வீடியோ எடுத்தார்கள் என்கிற கேள்விக்கு பதில் இல்லையாம்.
இந்த விவகாரம் உள்துறை அமைச்சருக்கு
கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். இனிமேல் டில்லியில் தமிழக போலீசார் மத்திய
அமைச்சர்கள் வீடுகளை கண்காணித்தால், அவர்களை டில்லி போலீசார் கண்காணிக்க
வேண்டும் என அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த, 1991ல் சந்திரசேகர் பிரதமராக இருந்த போது ராஜீவ் வீட்டு வாசலில்
இரண்டு ஹரியானா போலீசார் உளவு பார்த்தனர். இதனால் கோபமடைந்த ராஜீவ்,
அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற, சந்திரசேகர் பதவி விலகினார். அதேபோல
தமிழக போலீசார் அமித் ஷா வீட்டு வாசலில் உளவு பார்க்கின்றனர் என்கின்றனர்
பா.ஜ.,வினர்.