Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/விமான விபத்து சம்பவங்களில் உயிரிழந்த பிரபலங்கள் பட்டியல்!

விமான விபத்து சம்பவங்களில் உயிரிழந்த பிரபலங்கள் பட்டியல்!

விமான விபத்து சம்பவங்களில் உயிரிழந்த பிரபலங்கள் பட்டியல்!

விமான விபத்து சம்பவங்களில் உயிரிழந்த பிரபலங்கள் பட்டியல்!

UPDATED : ஜூன் 14, 2025 07:55 AMADDED : ஜூன் 14, 2025 02:16 AM


Google News
Latest Tamil News
ஆமதாபாத் விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். இதுபோன்ற விமான விபத்துகளில் உயிரிழந்த பிரபலங்களின் விபரம்:

ஹோமி பாபா

இந்திய அணுக்கருவியலின் தந்தை என போற்றப்படும் அணு விஞ்ஞானி ஹோமி பாபா, 1966 ஜனவரி 24ல் சர்வதேச மாநாட்டில் பங்கேற்க, ஏர் இந்தியா விமானத்தில் சென்றார். ஐரோப்பிய நாடான பிரான்சின் மவுன்ட் பிளாங் பகுதியில், இவர் சென்ற விமானம் வெடித்து சிதறியது. இதில், ஹோமி பாபா உயிரிழந்தார்.

சஞ்சய்

காங்கிரஸ் தலைவராகவும், அப்போதைய பிரதமராக இருந்த இந்திராவின் மூத்த மகனுமான சஞ்சய், 1980 ஜூன் 23ம் தேதி டில்லியில் பயிற்சி ஹெலிகாப்டரில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில், 33 வயதான சஞ்சய் பலியானார்.

மாதவராவ் சிந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவரும், விமான போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தவர் மாதவராவ் சிந்தியா, 56. கடந்த 2001 மார்ச் 3ம் தேதி, உத்தர பிரதேசத்தின் கான்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, தனி விமானம் வாயிலாக சென்றார். அப்போது, மோசமான வானிலை காரணமாக உ.பி.,யின் மெயின்பூர் அருகே விமானம் விபத்தில் சிக்கியதில், அவர் உயிரிழந்தார்.

பாலயோகி

லோக்சபா சபாநாயகராக இருந்தவரும், தெலுங்கு தேசத்தின் மூத்த தலைவருமான பாலயோகி, 50, தனி ஹெலிகாப்டரில் 2002 மார்ச் 3ம் தேதி சென்றார். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் சென்ற போது, விபத்தில் சிக்கி பலியானார்.

சவுந்தர்யா

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்த நடிகை சவுந்தர்யா என்கிற சவுமியா, 31. கடந்த 2004, ஏப்ரல் 17ல் தன் சகோதரருடன் கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் சென்றபோது விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் உயிரிழந்தனர்.

ஓ.பி.ஜிண்டால்

பிரபல தொழிலதிபரும், ஹரியானா அமைச்சருமான ஓம் பிரகாஷ் ஜிண்டால், ஹெலிகாப்டரில் 2005ல் டில்லியில் இருந்து சண்டிகருக்கு பயணித்தார். அப்போது, ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில், பலியானார்.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி

ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. இவர், 2009 செப்., 2ம் தேதி ஹெலிகாப்டரில் சென்றபோது, மோசமான வானிலை காரணமாக அடர்ந்த வனப்பகுதியில் சிக்கி விபத்துக்குள்ளானதில் பலியானார்.

தோர்ஜே காண்டு

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் முதல்வராக இருந்தவர் தோர்ஜே காண்டு. கடந்த 2011 ஏப்., 30ம் தேதி டாவாங்குடன் இடா நகருக்கு காண்டு மற்றும் நான்கு பேருடன் ஹெலிகாப்டரில் சென்றபோது விபத்தில் சிக்கி அனைவரும் உயிரிழந்தனர்.

பிபின் ராவத்

நம் நாட்டின் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், தமிழகத்தின் சூலுாரில் இருந்து வெலிங்டனுக்கு 2021 டிசம்பர் 8ம் தேதி தன் மனைவி மற்றும் 11 பேருடன் ஹெலிகாப்டரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில், அனைவரும் பலியாகினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us