Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ 40 தொகுதி, ராஜ்யசபா சீட், மத்திய அமைச்சர்; ராமதாஸ் - குருமூர்த்தி சந்திப்பில் பேரம்?

40 தொகுதி, ராஜ்யசபா சீட், மத்திய அமைச்சர்; ராமதாஸ் - குருமூர்த்தி சந்திப்பில் பேரம்?

40 தொகுதி, ராஜ்யசபா சீட், மத்திய அமைச்சர்; ராமதாஸ் - குருமூர்த்தி சந்திப்பில் பேரம்?

40 தொகுதி, ராஜ்யசபா சீட், மத்திய அமைச்சர்; ராமதாஸ் - குருமூர்த்தி சந்திப்பில் பேரம்?

UPDATED : ஜூன் 11, 2025 04:58 AMADDED : ஜூன் 11, 2025 03:16 AM


Google News
Latest Tamil News
'இருபது தொகுதிகள், 5 எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி' என, பா.ம.க., நிறுவனர் ராமதாசிடம், பா.ஜ., துாதர் குருமூர்த்தி தரப்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. 40 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., மற்றும் மத்திய இணை அமைச்சர் பதவி, ராமதாஸ் தரப்பில் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருவதற்கு முன்பே, பா.ம.க., கூட்டணியை உறுதி செய்வதற்காக, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை, ஆடிட்டர் குருமூர்த்தியும், முன்னாள் மேயர் சைதை துரைசாமியும், அமித் ஷா துாதர்களாக சந்தித்து பேசினர்.

மீண்டும் இரு தரப்பும் சென்னையிலும் சந்தித்துப் பேசின.

கூட்டணி அவசியம்


அப்போது, ராமதாசிடம் குருமூர்த்தி கூறியுள்ளதாவது:


கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., கூட்டணி ஏற்பட்டிருந்தால், 25 தொகுதிகள் வரை வெற்றி பெற்றிருக்க முடியும். சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியை வீழ்த்த, இந்த கூட்டணி அவசியம்.

பா.ம.க.,வில் நடக்கும் உட்கட்சி மோதல், ஒருவேளை கூட்டணி அமைந்து தேர்தலை சந்திக்கும் சூழலில், அது கூட்டணி வெற்றியை பாதிக்கும். எனவே, அன்புமணியிடம் சமரசமாகி, கூட்டணியை பலப்படுத்த வேண்டும்.

சட்டசபை தேர்தலில், குறைந்தபட்சம் 15, அதிகபட்சமாக 20 தொகுதிகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. கூட்டணி ஆட்சிதான், தமிழகத்தில் ஏற்படுத்தப்படும் என, அமித் ஷா உறுதி செய்துள்ளார்.

அந்த வகையில், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க.,வில் கூட்டணி அமைந்து, அக்கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில், 5 எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும். அதற்கு அமித் ஷா உறுதுணையாக இருப்பார். எனவே கூட்டணி முடிவை, நீங்கள் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சிம்ம சொப்பனம்


அதற்கு ராமதாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ள பதில்:


வட மாவட்டங்களில், 100 தொகுதிகளில், தி.மு.க.,வுக்கு நாங்கள்தான் சிம்ம சொப்பனமாக இருக்கிறோம். அதனால், 35 - 40 தொகுதிகளில் நாங்கள் போட்டியிட்டாக வேண்டும். மேலும், ஒரு ராஜ்யசபா 'சீட்' மற்றும் மத்திய இணை அமைச்சர் பதவியும் வழங்க வேண்டும்.

இதற்கு ஒப்புக் கொண்டு, தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும். சம்மதமா என கேட்டு சொல்லுங்கள்; அப்புறம் முடிவை சொல்கிறேன் இவ்வாறு ராமதாஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us