பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காத்திருக்கு ஆபத்து! அகற்றிய வேகத்தடை, தடுப்புகளை மீண்டும் அமைக்காத அதிகாரிகளால்!
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காத்திருக்கு ஆபத்து! அகற்றிய வேகத்தடை, தடுப்புகளை மீண்டும் அமைக்காத அதிகாரிகளால்!
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காத்திருக்கு ஆபத்து! அகற்றிய வேகத்தடை, தடுப்புகளை மீண்டும் அமைக்காத அதிகாரிகளால்!
UPDATED : ஜூலை 10, 2024 06:26 AM
ADDED : ஜூலை 10, 2024 02:25 AM

கோவையில் ஜனாதிபதி வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகள், இப்போது வரை மீண்டும் அமைக்காமல் இருப்பது, விபத்துக்கான வாய்ப்புகளை அதிகரித்து வருகிறது.
கோவை நகருக்கு வி.வி. ஐ.பி.,க்கள் வரும்போது, அவர்கள் பயணம் செய்யும் ரோடுகளில் வேகத்தடைகளை அகற்றுவது வாடிக்கை.
2023ல், ஈஷா யோகா மையத்தில் நடந்த, மஹா சிவராத்திரி விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தபோது, அவர் வருகை தந்த பாதையில் இருந்த ரோடுகள் சீரமைக்கப்பட்டன. அவிநாசி ரோடு துவங்கி, சிறுவாணி ரோடு, கவுலி பிரவுன் ரோடு, தடாகம் ரோடு, லாலி ரோடு, மருதமலை ரோடு மற்றும் வடவள்ளி- - தொண்டாமுத்துார் ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளிலும் இருந்த குழிகள் மூடி சமமாக்கப்பட்டன.
அந்த ரோடுகளின் ஓரங்களில் இருந்த முட்புதர்கள், தாழ்வான கிளைகள் வெட்டப்பட்டதுடன், 25 வேகத்தடைகளும் முற்றிலும் அகற்றப்பட்டன. பல மாதங்களுக்குப் பின்,பல வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்பட்டன.
இப்படி மறந்துட்டீங்களே!
ஆனால் இந்த ஆண்டில், அதே போல மஹா சிவராத்திரி விழாவுக்கு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வருகை தந்ததை முன்னிட்டு, மீண்டும் அந்த வேகத்தடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். ஐந்து மாதங்களாகியும் இப்போது வரை மீண்டும் அமைக்கவில்லை.
சில இடங்களில் மட்டும், போலீசாரால் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல்வேறு சாலை சந்திப்புகளில் மீண்டும் வேகத்தடைகளை அமைக்காததோடு, இரும்புத் தடுப்புகளையும் வைக்கவில்லை.
இதன் காரணமாக, வாகனங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் வருகின்றன. சந்திப்புகளில் போக்குவரத்து போலீசாரும் நிறுத்தப்படுவதில்லை என்பதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
விபத்து ஆபத்து
வேளாண் பல்கலை, வடவள்ளி சின்மயா பள்ளி, தொண்டாமுத்துார் அரசு பள்ளி, அரசு கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் முன்பாக, மாணவர்கள் ரோட்டைக் கடப்பது பேராபத்தாகவுள்ளது.
இந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் சாலை சந்திப்புகளில், மீண்டும் வேகத்தடைகளை அமைக்க வேண்டுமென்று, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத் துள்ளன.
ஆனால் அதுபற்றி அத்துறையினர் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. இதுகுறித்து கருத்துக் கேட்பதற்காக, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலரையும் தொடர்பு கொண்டபோது, யாரிடமுமே பதில் பெற முடியவில்லை.
போட்ட ரோட்டின் மீதே, 'பேட்ச் ஒர்க்' செய்து, லாபம் பார்க்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு, இதற்கு மட்டும் நிதி இல்லையா என்பதே, இப்பகுதி மக்களின் கேள்வி.
-நமது நிருபர்-