தி.மு.க., அமைச்சர்கள், மா.செ.,க்கள் கருத்து கணிப்புகளால் 'கலக்கம்'
தி.மு.க., அமைச்சர்கள், மா.செ.,க்கள் கருத்து கணிப்புகளால் 'கலக்கம்'
தி.மு.க., அமைச்சர்கள், மா.செ.,க்கள் கருத்து கணிப்புகளால் 'கலக்கம்'
ADDED : ஜூன் 03, 2024 06:38 AM

தேர்தலுக்கு பிந்தைய சில கருத்துக் கணிப்புகளில், தமிழகத்தில் பா.ஜ., மூன்று தொகுதிகளையும், அ.தி.மு.க., எட்டு தொகுதிகளையும் கைப்பற்றும் என்று வெளியான தகவல், தி.மு.க.,வில் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. பதவிகள் பறிக்கப்படலாம் என்பதால், அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், தி.மு.க., போட்டியிட்ட தொகுதிகள், வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை முழுக்க, முழுக்க, தி.மு.க., தலைமைக்கு நெருக்கமான தேர்தல் வியூகம் அமைக்கும் நிறுவனம் வாயிலாகவே நடந்தது. பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு, கட்சி நிர்வாகிகளைவிட, இந்த தேர்தலில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.
பதவி பறிக்கப்படும்
'கடந்த 2019 லோக்சபா தேர்தலைவிட கூடுதலான ஓட்டு சதவீதத்தில் வெற்றி பெற வேண்டும். நாடும் நமதே; 40ம் நமதே. ஓட்டு கள் குறைந்து தோல்வி அடைந்தால் சர்வாதிகாரியாக மாறி, அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் பதவி பறிக்கப்படும்' என, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த கூட்டங்களில், முதல்வர் ஸ்டாலின் பல முறை எச்சரித்தார்.
அதேபோல், அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, '5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்' என சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, புதுச்சேரி போன்ற தொகுதிகளில், பா.ஜ., மலரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய்ப்பு இல்லை
அ.தி.மு.க.,வுக்கு கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, விருதுநகர் போன்ற தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இப்படி தனியார், 'டிவி' சேனல்கள் தெரிவித்த பல்வேறு கருத்துக் கணிப்பில், தி.மு.க., குறைந்தபட்சம், 29 தொகுதிகள் முதல் அதிகபட்சமாக, 37 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, தி.மு.க.,வுக்கு, 40க்கு 40 என்ற, 100 சதவீத வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என, கருத்துக் கணிப்புகள் பிரதிபலித்திருப்பது, தி.மு.க.,வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தோல்வி அடையும் தொகுதிகளை சேர்ந்த மாவட்டச் செயலர்கள், பொறுப்பு அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படும் என்பதால், அவர்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர். இவ்வாறு வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -