Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ பா.ஜ., பக்கம் பாலகிருஷ்ணா ரெட்டி? அ.தி.மு.க., வட்டாரங்களில் கிலி

பா.ஜ., பக்கம் பாலகிருஷ்ணா ரெட்டி? அ.தி.மு.க., வட்டாரங்களில் கிலி

பா.ஜ., பக்கம் பாலகிருஷ்ணா ரெட்டி? அ.தி.மு.க., வட்டாரங்களில் கிலி

பா.ஜ., பக்கம் பாலகிருஷ்ணா ரெட்டி? அ.தி.மு.க., வட்டாரங்களில் கிலி

ADDED : ஜூலை 04, 2024 04:52 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஓசூர்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, பா.ஜ., கட்சிக்கு தாவ இருப்பதாக தீயாய் தகவல் பரவி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஜீமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. ரியல் எஸ்டேட், செங்கல் சூளை தொழில் செய்து வந்த இவர், 2001ல் அ.தி.மு.க., உறுப்பினரானார். பின், 2006ல் எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணை செயலராக பதவி பெற்றார்.

அதன் தொடர்ச்சியாக 2010ல் ஓசூர், அ.தி.மு.க., ஒன்றிய செயலராகி, 2011ல் ஓசூர் நகராட்சி தலைவரானார். அதன்பின், 2016ல் ஓசூர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரானார்.

முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். 1998ல் கள்ளச்சாராயத்திற்கு எதிராக, ஓசூர் அருகே பாகலுாரில் நடந்த போராட்டத்தில் போலீசார் ஜீப் எரிக்கப்பட்டது. இதில், 108 பேர் மீது வழக்கு பதியப்பட்டதில், பாலகிருஷ்ணா ரெட்டியும், 71வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. பின், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 2019 ஜன., மாதம் வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. இதனால், அவருடைய எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் பதவி பறிபோனது.

தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு செய்தார். அவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மூன்று ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்தது.

அ.தி.மு.க.,வின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலராக உள்ள அவர், இரண்டாண்டுக்கும் கூடுதலாக தண்டனை பெற்றதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2019 ஓசூர் இடைத்தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாதசூழல் ஏற்பட்டது. இதனால், மனைவி ஜோதிக்கு, அ.தி.மு.க., வில், 'சீட்' வாங்கி கொடுத்தார். ஆனால், ஜோதி தோல்வியடைந்தார்; தி.மு.க., வெற்றி பெற்றது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் முனுசாமியின் ஆதரவாளரான, அ.தி.மு.க., - எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் ஜெயப்பிரகாஷ், சமீபத்தில் நடந்த எம்.பி., தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு தான், வரும் சட்டசபை தேர்தலில், ஓசூர் தொகுதியில் சீட் வழங்கப்படும் என, முனுசாமி ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.

இதனால், ஓசூர் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் மீண்டும் போட்டியிடும் எண்ணத்தில் இருந்த பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிக்கல் ஏற்பட்டது.

ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த சிறை தண்டனையில் இருந்து தற்போது தப்பியுள்ள நிலையில், மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பதால், வேறு கட்சி பக்கம் போகலாமா என்ற எண்ணம் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு ஏற்பட்டிருக்கிறது.

அவருடைய மனநிலையை அறிந்த பா.ஜ.,வினர் சிலரும்தொடர்ச்சியாக பாலகிருஷ்ணா ரெட்டியிடம் பேசி வருவதால், தன் ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க அவர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. பா.ஜ.,வில் ஐக்கியமாகலாம் என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டதால், அவருடைய ஆதரவாளர்களும் இப்போது பாலகிருஷ்ணா ரெட்டிக்கு நெருக்கடி கொடுப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

இது குறித்து, பாலகிருஷ்ணா ரெட்டியிடம் கேட்டபோது, ''ஓசூரில் அ.தி.மு.க.,வே இல்லை என கூறிய காலகட்டத்தில் கட்சிக்கு வந்தேன். இந்தப் பகுதியில் கட்சி பலம் பெற உழைத்திருக்கிறேன். ஒன்றிய செயலர், நகராட்சி தலைவர், மாவட்ட செயலர், அமைச்சர் என பல பதவிகளை அ.தி.மு.க.,வில் தான் பெற்றேன். அப்படிப்பட்ட கட்சியை விட்டு, வேறு பக்கம் போவது குறித்து சிந்திக்கவில்லை,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us