அ.தி.மு.க., கூட்டணியில் சேர நடிகர் விஜய்க்கு நெருக்கடி
அ.தி.மு.க., கூட்டணியில் சேர நடிகர் விஜய்க்கு நெருக்கடி
அ.தி.மு.க., கூட்டணியில் சேர நடிகர் விஜய்க்கு நெருக்கடி
ADDED : மார் 12, 2025 04:27 AM

சென்னை: அ.தி.மு.க., கூட்டணியில் இணைவதே சிறந்த முடிவு என, பல தரப்பில் இருந்தும் த.வெ.க., தலைவர் விஜய்க்கு நெருக்கடி தரப்படுகிறது.
த.வெ.க.,வுடன் கூட்டணி வைக்க, நாம் தமிழர் கட்சி விரும்பியது. ஆனால், விஜய் அறிவித்த கட்சிக் கொள்கைளால், கூட்டணி அமைவதில் முட்டுக்கட்டை விழுந்தது. இதையடுத்து, விஜய் எதிர்ப்பு அரசியலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கையில் எடுத்துள்ளார்.
அதையடுத்து, விஜயுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே விஜயுடன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் மகன் உள்ளிட்டோர் ரகசிய பேச்சு நடத்தியுள்ளனர்.
த.வெ.க., தலைமையில் தான் கூட்டணி என விஜய் திட்டவட்டமாக கூறியதால், கூட்டணி பேச்சில் முட்டுக்கட்டை விழுந்தது. இந்நிலையில், விஜய் கட்சியில் சமீபத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டவர்கள், 'யு டியூபர்'கள், விஜய் ஆதரவு தொழிலதிபர்கள், கிறிஸ்துவ அமைப்புகள் தரப்பில் இருந்து, அ.தி.மு.க., கூட்டணியில் சேருமாறு விஜய்க்கு அழுத்தம் தரப்படுவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தால், 60 தொகுதிகள் வரை வெல்வதற்கு வாய்ப்புள்ளது; எதிர்க்கட்சித் தலைவர் வாய்ப்பும் கிடைக்கும். அதை வைத்து அரசியல் செய்து, அடுத்த தேர்தலில் முதல்வர் நாற்காலியை பிடிக்க முடியும்.
இப்போது கோட்டை விட்டால், த.வெ.க.,வால் எப்போதும் எழுந்து நிற்க முடியாது என, விஜய்க்கு அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர் பயம் காட்டத் துவங்கியுள்ளனர். அதனால், விஜய் குழப்பத்தில் இருக்கிறார். தன் இறுதி திரைப்பட படப்பிடிப்பில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். அது முடிந்ததும், கூட்டணி முடிவை தெரிவிப்பதாக தன்னை சந்திப்பவர்களிடம் கூறி வருகிறார்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.