Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ தேசிய திறந்தவெளி பள்ளி சான்றிதழ் செல்லாது உத்தரவுக்கு தடை

தேசிய திறந்தவெளி பள்ளி சான்றிதழ் செல்லாது உத்தரவுக்கு தடை

தேசிய திறந்தவெளி பள்ளி சான்றிதழ் செல்லாது உத்தரவுக்கு தடை

தேசிய திறந்தவெளி பள்ளி சான்றிதழ் செல்லாது உத்தரவுக்கு தடை

UPDATED : மே 28, 2024 12:00 AMADDED : மே 28, 2024 11:32 AM


Google News
Latest Tamil News
சென்னை:
தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவன சான்றிதழ், தமிழக அரசு வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசின் உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் விஷ்ணு, சந்தோஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனு:
விளையாட்டு, கலைத்துறை உள்ளிட்டவற்றில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பவர்களால், வகுப்புகளுக்கு வர இயலாது. இவர்களுக்காக, தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனத்தை மத்திய அரசு துவக்கியது.
பாடத்திட்டங்களை வழங்கி தேர்வு எழுத, இந்த நிறுவனம் உதவி செய்யும். இந்த திறந்தவெளி பள்ளியில் சேருபவர்கள், தினசரி வகுப்புக்கு வர மாட்டர்.
நாங்களும் திறந்தவெளி பள்ளியில், 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 படித்து வருகிறோம். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் பங்கேற்க எங்களுக்கு தகுதி உள்ளது.
ஆனால், பள்ளிக் கல்வித்துறை, கடந்த டிசம்பரில் பிறப்பித்த உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது. அதாவது, அரசு வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு, தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனம் வழங்கும் சான்றிதழ் செல்லாது என, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எங்கள் தரப்பை கேட்காமல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனத்தில் தேர்ச்சி பெறுபவர்கள், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்பை தொடர தகுதி பெறுகின்றனர்.
தமிழக அரசின் உத்தரவால், திறந்தவெளி பள்ளி மாணவர்களின் படிப்பில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. மாநில கல்வி வாரியம் நடத்தும் படிப்பை விட, திறந்தவெளி பள்ளி படிப்பின் தரம், எந்த விதத்திலும் குறைவானதல்ல.
தமிழக அரசின் உத்தரவு, திறந்தவெளி பள்ளியில் படித்தவர்கள் மற்றும் படிப்பவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. படிப்பை முடித்தவர்கள், அரசு வேலைவாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என்ற சட்டப்பூர்வ எதிர்பார்ப்பு இருக்கும்.
எனவே, கடந்த டிசம்பரில் பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை உத்தரவுக்கு தடை விதித்து, மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க, நீதிபதி உத்தரவிட்டார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us