Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ கட்டட அமைப்பியல் சான்று அனுமதி அண்ணா பல்கலைக்கு மாற்ற எதிர்ப்பு

கட்டட அமைப்பியல் சான்று அனுமதி அண்ணா பல்கலைக்கு மாற்ற எதிர்ப்பு

கட்டட அமைப்பியல் சான்று அனுமதி அண்ணா பல்கலைக்கு மாற்ற எதிர்ப்பு

கட்டட அமைப்பியல் சான்று அனுமதி அண்ணா பல்கலைக்கு மாற்ற எதிர்ப்பு

UPDATED : ஜூன் 08, 2024 12:00 AMADDED : ஜூன் 08, 2024 07:44 PM


Google News
சென்னை: புதிய கட்டடங்களுக்கு அமைப்பியல் சான்று வழங்கும் பணியை, பொதுப்பணி துறையிடம் இருந்து அண்ணா பல்கலைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பொதுப்பணித்துறை வாயிலாக, வருவாய், வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, பள்ளி கல்வி உள்பட பல்வேறு அரசு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. தலைமை செயலகம் முதல் கிராம நிர்வாக அலுவலகம் வரை பல்வேறு துறைகளுக்கான அரசு கட்டடங்கள் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னை மற்றும் அதன் விரிவாக்க பகுதிகளில், அரசு மற்றும் தனியார் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் அனுமதி பெறப்பட்டு வந்தது. அ.தி.மு.க., ஆட்சியில் முகலிவாக்கத்தில் தரக்குறைவாக கட்டப்பட்ட ஒரு அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து பலர் பலியாகினர்.
அதனருகில் கட்டிய மற்றொரு அடுக்குமாடி கட்டடம், வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதையடுத்து, கட்டடங்களின் அடித்தள உறுதி தன்மையை உறுதி செய்வதற்காக, புதிய கட்டடங்களுக்கு அமைப்பியல் சான்று வழங்கும் பணி, பொதுப்பணி துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கென, பொதுப்பணி துறையில், திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவிற்கு, சி.எம்.டி.ஏ.,வில் இருந்து வரைபட விண்ணப்பங்கள் அனுப்பப்படுகின்றன. அவற்றை கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கி வருகின்றனர். இப்பணி, இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில், இப்பணிக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்க பொதுப்பணி துறை முடிவு செய்தது.
அதனால், பொதுப்பணி துறையிடம் இருந்து, கட்டட அமைப்பியல் சான்று வழங்கும் பணியை, அண்ணா பல்கலை பேராசிரியர் குழுவிற்கு மாற்றுவதற்கு, முதல்வரின் செயலர் ஒருவரிடம் இருந்து பரிந்துரை வந்துஉள்ளதாக தெரிகிறது.
இத்தகவல், பொதுப்பணி துறை அமைச்சர் வேலு கவனத்திற்கு சென்றதும், முதல்வரிடம் பேசி, திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவை விரிவுப்படுத்துவதாகவும், அதற்கு தேவையான பொறியாளர்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கு மாற்றும் பரிந்துரையை கிடப்பில் போடும் நிலை ஏற்பட்டுள்ளதால், பொதுப்பணி துறை பொறியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us