Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் மூலிகை தோட்டம் அமைப்பு! மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அரசு பள்ளியில் மூலிகை தோட்டம் அமைப்பு! மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அரசு பள்ளியில் மூலிகை தோட்டம் அமைப்பு! மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அரசு பள்ளியில் மூலிகை தோட்டம் அமைப்பு! மாணவர்களுக்கு விழிப்புணர்வு

UPDATED : ஜூன் 18, 2024 12:00 AMADDED : ஜூன் 18, 2024 08:17 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி:
ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், மாணவர்கள் வாயிலாக மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், 150 பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக, 50 வகையான மூலிகைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

தேசிய பசுமைப்டை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கீதா கூறியதாவது:

பிளாஸ்டிக் பயன்பாடால் ஏற்படும் தீமைகள் குறித்து, மாணவர்கள் மனதில் பதிய வைக்க, பிளாஸ்டிக் பாட்டிலுக்கு மாற்றாக, 50 வகை மூலிகைச் செடிகள் பரிசாக வழங்கி, மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது.

50 வகை மூலிகைகளை பள்ளி வளாகத்தில் உள்ள மூலிகை தோட்டத்தில் நட்டு வளர்க்கும் பணி, மாணவர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு மூலிகைகள் என பிரித்து வளர்த்த வழி வகுக்கப்பட்டது.

நொச்சி, இரத்த உறைதலை தடுக்க முறிகூட்டி, சிறுநீரக கல்லை நீக்க பூனைமீசை, சளி இருமல் நீக்க துாதுவளை, சர்க்கரை நோயைக்குணப்படுத்த இன்சுலின், நினைவாற்றலைப் பெருக்க வல்லாரை, சளி மற்றும் இருமல் நீக்கும் சித்தரத்தை, தலைவலி நீக்கும் லெமன்கிராஸ், ஆண்மைக்கு நிலப்பனை, கூந்தல் கருப்பாக அவுரி, மாசிப்பச்சை, இரும்புச்சத்து அதிகரிக்க தவசு முருங்கை போன்ற மூலிகைகள், 50 மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

அவசர உலகத்தில் சத்தான உணவுகளை உண்ணாமல், துரித உணவு, பாக்கெட்டில் அடைத்த வறுத்த, பொறித்த உணவுகள் உண்டு வாழ்நாளில் அதிக நாட்கள் மருத்துவமனையை நாடுகின்றனர்.

நோய் வருமுன் காப்பவன் புத்திசாலி. சிறு சிறு நோய்களை குணப்படுத்த மருந்துகளை நாடாமல் முன்னோர்கள் தந்த மூலிகைகள் பயன் அறிந்து செயல்பட்டு வாழ்நாளெல்லாம் நலமாக வாழ இது புது முயற்சி ஆகும்.

வளரும் எதிர்காலத்தினருக்கு பிளாஸ்டிக் என்னும் அரக்கனை அறவே ஒழித்து மாற்றுப்பொருட்களான சில்வர், ஒயர்கூடை, காகிதப்பை, துணிப்பை, சணல்பை பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது.

காய்கறி தோட்டத்தில் முருங்கை, தக்காளி, மிளகாய், கீரை வகைகள் என பயிரிடப்பட்டது. காய்கறியிலுள்ள சத்துகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. அதன்பின், மாணவர்கள், காய்கறிதோட்டத்தில் வளர்க்க கூடிய காய்கறிகளை சத்துணவிற்கு வழங்குவோம் என உறுதியளித்தனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us