மனவளர்ச்சி மாற்றுத் திறனாளிகள் இலவச சிறப்பு பள்ளி திறப்பு
மனவளர்ச்சி மாற்றுத் திறனாளிகள் இலவச சிறப்பு பள்ளி திறப்பு
UPDATED : மே 01, 2026 06:07 PM
ADDED : மே 01, 2026 06:09 PM
புவனகிரி:
புவனகிரி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அவதார ஸ்தல புனித தொண்டு அறக்கட்டளை சார்பில், மனவளர்ச்சி மாற்றுத் திறனாளிகள் இலவச சிறப்பு பள்ளி, கடந்த 20 ஆண்டுகளாக, கோவில் எதிரில் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் இயங்கி வருகிறது. இங்கு, 17 வயதுக்கு உட்பட்ட, 100 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இதையொட்டி, சகல வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட அறக்கட்டளை நிர்வாகம் சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போதைய கலெக்டர் ஆய்வு செய்து அரசு சார்பில் 16 சென்ட் இடம் தானமாக வழங்கினார்.
கோவில் நிர்வாகம் பல்வேறு தரப்பினரை அணுகி, தற்போது ரூ.4 கோடி மதிப்பில், புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று காலை பல்வேறு பூஜைகளுடன் நடந்தது.
புனிதத்தொண்டு அறக்கட்டளை தலைவர் கயிலை ராமநாதன் தலைமை தாங்கினார். டாக்டர் உதயசூரியன் வரவேற்றார்.
மாவட்ட மாற்றுத்திறனாளி நல துணை இயக்குனர் பாலசுந்தரம், சென்னை ஓம் காமேஸ்வரி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
யூனிபிக் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஸ்ரீசரத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பள்ளிக்கட்டடத்தை திறந்து வைத்து வாழ்த்தினார்.
ராகவேந்திரர் புனித தொண்டு அறக்கட்டளை முன்னாள் தலைவர் கோவிந்தசாமி சிலையினையும்,முன்னாள் கோவில் முதன்மை அர்ச்சகர் ரகு ஆச்சாரி படத்தையும், சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ் பெருமாள் நிர்வாக அறங்காவலர் ரங்காச்சாரியார் திறந்து வைத்தார்.
அறக்கட்டளை பொருளாளர் கதிர்வேல் நன்றி கூறினார்.
