Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் ரிசர்வ் வங்கி அறிக்கையில் கணிப்பு

பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் ரிசர்வ் வங்கி அறிக்கையில் கணிப்பு

பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் ரிசர்வ் வங்கி அறிக்கையில் கணிப்பு

பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் ரிசர்வ் வங்கி அறிக்கையில் கணிப்பு

UPDATED : ஜூன் 06, 2024 12:00 AMADDED : ஜூன் 06, 2024 03:38 PM


Google News
Latest Tamil News
மும்பை:
ரிசர்வ் வங்கி, கடந்த நிதியாண்டுக்கான அதன் ஆண்டு அறிக்கையை நேற்று வெளியிட்டது. உள்நாட்டு பொருளாதார அடிப்படைகள் தொடர்ந்து வலுவாக இருப்பதாகவும்; நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் மேலும் குறையக்கூடும் என்றும் அதில் தெரிவித்து உள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதால், நடப்பு நிதியாண்டில், வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்த பணவீக்கம் மேலும் குறையக்கூடும். எனினும், வினியோக தொடரில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்கள் காரணமாக, உணவு பணவீக்கம் பாதிக்கப்படக் கூடிய நிலையிலேயே உள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த, அரசின் தலையீடு அவசியம் என்றாலும், பொருட்களின் விலையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தி, பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதில், ரிசர்வ் வங்கி உறுதியாக உள்ளது.
பணவீக்கம் இலக்குக்குள் வர தொடங்கியுள்ளதால், தேவைகள், குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகரிக்கக் கூடும். சிறப்பான உள்நாட்டு பொருளாதார சூழல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையின் காரணமாக, அடுத்த 10 ஆண்டுகளில், இந்திய பொருளாதாரம் இன்னும் கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்யும் இடத்தில் உள்ளது.
உலகளவில் நிலவும் பிரச்னைகளிலிருந்து, உள்நாட்டு பொருளாதாரத்தை காப்பதற்கு வலுவான அன்னிய முதலீடுகளும், அன்னிய செலாவணி கையிருப்புகளும் உதவும்.
அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மிஷின் லேர்னிங் தொழில்நுட்ப பயன்பாடுகள் மற்றும் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, நாடு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புழக்கம் அதிகரிப்பு
கடந்தாண்டு 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற துவங்கியதை அடுத்து, நாட்டில் புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுகளில், 500 ரூபாய் நோட்டுகளின் பங்கு 77.10 சதவீதத்திலிருந்து 86.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு, 10.80 சதவீதத்திலிருந்து 0.20 சதவீதமாக குறைந்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம் ஜி.டி.பி.,யை விட அதிகம்
கடந்த நிதியாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் இருப்புநிலை 11.08 சதவீதம் அதிகரித்து, 70.48 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பைக் காட்டிலும் அதிகமாகும். உலக வங்கியின் தரவுகளின் படி, பாகிஸ்தானின் ஜி.டி.பி., 31.12 லட்சம் கோடி ரூபாய். வங்கதேசத்தின் ஜி.டி.பி., 38.18 லட்சம் கோடி ரூபாய். இவை இரண்டின் கூட்டுத் தொகையைக் காட்டிலும், ரிசர்வ் வங்கியின் இருப்புநிலை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது
ரூ.2.11 லட்சம் கோடி
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் 87,420 கோடி ரூபாயாக இருந்த ரிசர்வ் வங்கியின் நிகர வருவாய், கடந்த நிதியாண்டில் 2.11 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அன்னிய கடன் பத்திர முதலீடுகளின் வட்டி அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த நிதியாண்டில், ரிசர்வ் வங்கியின் செலவினம் கிட்டத்தட்ட 60 சதவீதம் குறைந்து 64,694 கோடி ரூபாயாக இருந்தது




      Our Apps Available On




      Dinamalar

      Follow us