Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ சிங்கம்புணரியில் கானல் நீராகும் கல்லுாரி

சிங்கம்புணரியில் கானல் நீராகும் கல்லுாரி

சிங்கம்புணரியில் கானல் நீராகும் கல்லுாரி

சிங்கம்புணரியில் கானல் நீராகும் கல்லுாரி

UPDATED : ஜன 21, 2025 12:00 AMADDED : ஜன 21, 2025 09:07 AM


Google News
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி அருகே மாணவர்களின் கல்லுாரி கனவு கானல் நீராகும் நிலையில், மற்றொரு பக்கம் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

மாவட்டத்தில் மலை சார்ந்த விவசாய பகுதியான எஸ்.புதுார் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள்உள்ளன. பெரும்பாலான ஊராட்சிகள் மலை தொடர்களுக்கு நடுவிலும், மலை அடிவாரத்திலும் உள்ள நிலையில் மக்கள் விவசாயிகளாகவும், விவசாய தொழிலாளர்களாகவும் உள்ளனர்.

இவ்வொன்றியத்தில் 47 தொடக்கப் பள்ளிகளும், 13 நடுநிலைப் பள்ளிகளும், ஒரு உயர்நிலைப்பள்ளி, 7 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பகுதியில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் குறிப்பாக பெண்கள் பலர் உயர்கல்வியை பயில கல்லுாரிகளுக்கு அனுப்பப்படுவதே இல்லை. இதனால் பள்ளி படிப்பு முடித்த கையோடு பெண் பிள்ளைகளுக்கு சிலர் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

மேலும் சிலர் 18 வயது நிறைவடைவதற்கு முன்பாகவே குழந்தை திருமணமாக முடித்து விடுகின்றனர். இதனால் எதிர்கால லட்சியங்களுடன், பட்டப்படிப்பை தொடர நினைக்கும் பல மாணவிகளின் கல்லுாரி கனவுகள் கானல் நீராகி விடுகிறது.

திருமணம் முடிந்து ஓராண்டிற்கு பிறகு அந்தப்பெண்ணிற்கு பிரசவம் ஆகும் வரை குழந்தை திருமணம் நடந்தது வெளியே தெரிவதில்லை. குழந்தை பிறந்த பிறகு ஆவணங்களில் பிறந்த தேதியை பார்க்கும் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கவும் முடியவில்லை.

தங்களிடம் பயின்ற மாணவர்கள் பலர் உயர்கல்விக்கு செல்ல முடியாததுடன், அவர்களுக்கு திருமணம் ஆகிவிடுவதைக் கண்டு ஆசிரியர்கள் கண்ணீர் வடிக்காத குறையாக புலம்புகின்றனர்.

காலை, மாலை நேரங்களில் குறைவான பஸ் போக்குவரத்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு காடு, மலை வழியாக நீண்ட துார பயணம் என இப்பகுதி மாணவர்கள் உயர்கல்வியை தொடரமுடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இங்கு எந்தவொரு கல்லுாரியும் இல்லாததே முழுமுதற் காரணமாக உள்ளது.

எஸ்.புதுார் ஒன்றிய மாணவர்களின் கல்லுாரி கனவுகளை நனவாக்கும் விதமாக இவ்வொன்றியத்தில் அரசு சார்பில் தொழிற் மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளை துவக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us