Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/5, 8ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல்

5, 8ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல்

5, 8ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல்

5, 8ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல்

UPDATED : டிச 26, 2024 12:00 AMADDED : டிச 26, 2024 07:49 PM


Google News
சென்னை:
மத்திய அரசு பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கல்வித்தரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறித்து விடும். இது மிகவும் தவறான முடிவு.

மத்திய அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவரும் நகர்ப்புற பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் அல்ல. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25% இட ஒதுக்கீட்டில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். 5 அல்லது 8ம் வகுப்பில் அவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படாவிட்டால், அவர்கள் அத்துடன் படிப்பை நிறுத்தி விடுவார்கள். அப்படி ஒரு நிலை உருவாகக் கூடாது என்பதற்காகத் தான் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற தத்துவம் உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில் 2020ம் ஆண்டில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு 2020ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அப்போதைய தமிழக அரசு அறிவித்தது. அதைக் கண்டித்து அந்த ஆண்டு ஜனவரி 28ம் தேதி தமிழகம் முழுவதும் பா.ம.க., சார்பில் அறப்போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பா.ம.க.,வுடன் பேச்சு நடத்திய அன்றைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன், 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும், அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

கிராமப்புற ஏழை மாணவர்கள் முழுமையான கல்வி சுதந்திரம் பெறும் வரை, எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி முறை தொடர வேண்டும். எனவே, மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us