Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளிக்கு அங்கீகாரம் தரும் சட்டப்பிரிவுக்கு எதிராக வழக்கு

தனியார் பள்ளிக்கு அங்கீகாரம் தரும் சட்டப்பிரிவுக்கு எதிராக வழக்கு

தனியார் பள்ளிக்கு அங்கீகாரம் தரும் சட்டப்பிரிவுக்கு எதிராக வழக்கு

தனியார் பள்ளிக்கு அங்கீகாரம் தரும் சட்டப்பிரிவுக்கு எதிராக வழக்கு

UPDATED : செப் 11, 2024 12:00 AMADDED : செப் 11, 2024 07:12 PM


Google News
Latest Tamil News
சென்னை:
குறிப்பிட்ட காலத்துக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டப்பிரிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் பள்ளிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் கே.பழனியப்பன் தாக்கல் செய்த மனு:

கடந்த 1973ம் ஆண்டில், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் அறிமுகமானது; அதைத்தொடர்ந்து, விதிகள் வகுக்கப்பட்டன. சட்டத்தில் நிரந்தர அங்கீகாரம் என்ற பொருள்படியான வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்காலிக அங்கீகாரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருந்தும், கல்வித்துறையானது தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்கியது.
கடந்த, 1994ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை, நிரந்தர அங்கீகாரம் வழங்க வகை செய்தது. இந்த அரசாணையை வாபஸ் பெறாமல், நிர்வாக உத்தரவு என்ற பெயரில், தற்காலிக அங்கீகாரத்தை கல்வித்துறை வழங்கியது.
அதற்கு, பள்ளிகளில் நடக்கும் தவறுகளை தடுப்பதற்காக, தற்காலிக அங்கீகாரம் வழங்குவதாகக் காரணம் கூறியது.
ஆனால், சட்ட விதிகளை, நிபந்தனைகளை பள்ளிகள் மீறினால், அங்கீகாரத்தை வாபஸ் பெற சட்டத்திலேயே வகை செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் தவறு செய்தால், கல்வித்துறை நடவடிக்கை எடுக்க முடியும்.
தற்போது, அரசு இயற்றி உள்ள புதிய சட்டம், கடந்த ஜனவரியில் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே அங்கீகாரம் பெற முடியும்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, அங்கீகாரத்தை புதுப்பிக்கும் நடைமுறையை பள்ளிகள் பின்பற்ற வேண்டும். இதனால், தனியார் பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது. எனவே, குறிப்பிட்ட காலத்துக்கு என அங்கீகாரம் வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us