Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலைக்கழகங்கள் பிரச்னைக்கு தீர்வு காண அமைச்சரவை துணை கமிட்டி

பல்கலைக்கழகங்கள் பிரச்னைக்கு தீர்வு காண அமைச்சரவை துணை கமிட்டி

பல்கலைக்கழகங்கள் பிரச்னைக்கு தீர்வு காண அமைச்சரவை துணை கமிட்டி

பல்கலைக்கழகங்கள் பிரச்னைக்கு தீர்வு காண அமைச்சரவை துணை கமிட்டி

UPDATED : ஜூன் 24, 2024 12:00 AMADDED : ஜூன் 24, 2024 10:27 AM


Google News
பெங்களூரு:
பல்கலைக்கழகங்களில், பேராசிரியர்கள், ஊழியர்கள் குறைவாக உள்ளதை தீவிரமாக கருதி உள்ள மாநில அரசு, அதற்கு தீர்வு காணும் வகையில், அமைச்சரவை துணை கமிட்டி அமைத்துள்ளது.

கர்நாடக அமைச்சரவை கூட்டம், முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடந்தது. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

பின், சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல், கூறியதாவது:


* உயர்கல்வி துறையின் கீழ் வரும் பல பல்கலைக்கழகங்களில், பேராசிரியர்கள், ஊழியர்கள் ஓய்வுக்கு பின், நிரப்பப்படாமல் உள்ளன. இடமாற்றமும் சரியாக நடக்கவில்லை. சம்பளம், ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லை. இப்படி பல பிரச்னைகள் உள்ளன. இதற்கு தீர்வு கண்டுபிடிப்பதற்காக, அமைச்சரவை துணை கமிட்டி அமைக்கப்படும்.

பிரதமர் விரிவான கல்வி திட்டத்தின் கீழ், எஸ்.சி., - எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு உதவுவதற்கு, பெங்களூரு, ராணி சென்னம்மா, கர்நாடகா, மங்களூரு, கலபுரகி, மஹாராணி கிளஸ்டர் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு, மத்திய அரசு 167.86 கோடி ரூபாயும்; மாநில அரசு 111.91 கோடி ரூபாயும் என மொத்தம் 279.77 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்த ஒப்புதல்.

* சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, குடியரசு நாளான ஜனவரி 26, அரசியல் அமைப்பு நாளான நவம்பர் 26 ஆகிய நாட்களில், மாநிலத்தின் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் உட்பட அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், மகாத்மா காந்தி படத்துடன், அம்பேத்கர் படமும் கட்டாயமாக வைப்பதற்கு உத்தரவு.

* மைசூரு மருத்துவ கல்லுாரி ஆராய்ச்சி மையத்தின் நுாற்றாண்டு விழாவின் நினைவாக, கே.ஆர்.மருத்துவமனை வளாகத்தில், 75 கோடி ரூபாயில் புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டடம் கட்டப்படும்.

* மாநிலத்தின், 46,829 அரசு பள்ளிகள், 1,234 பி.யு., கல்லுாரிகளுக்கு 29.19 கோடி ரூபாயில் இலவச மின்சாரம், குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.

* நீட் தேர்வில் நடந்துள்ள குளறுடிக்கு, கர்நாடக அமைச்சரவை கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து, மத்திய உயர்கல்வி துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

* மழை கால சட்டசபை கூட்டத்தொடர் நடத்த வேண்டிய தேதியை முடிவு செய்வதற்கு, முதல்வர் சித்தராமையாவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 8 அல்லது 15 முதல் 10 நாட்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us