Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அம்பேத்கர் மணி மண்டபத்தில் புத்தகங்கள்: வழக்கு முடித்துவைப்பு

அம்பேத்கர் மணி மண்டபத்தில் புத்தகங்கள்: வழக்கு முடித்துவைப்பு

அம்பேத்கர் மணி மண்டபத்தில் புத்தகங்கள்: வழக்கு முடித்துவைப்பு

அம்பேத்கர் மணி மண்டபத்தில் புத்தகங்கள்: வழக்கு முடித்துவைப்பு

UPDATED : ஏப் 13, 2024 12:00 AMADDED : ஏப் 13, 2024 10:42 AM


Google News
Latest Tamil News
சென்னை:
அம்பேத்கரின் 134வது பிறந்த நாள், நாளை கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில், காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட அனுமதிக்க வேண்டும்.
மணி மண்டப வளாகத்தில், அம்பேத்கரின் எழுத்துகள், உரைகளை தொகுத்த புத்தகங்களை விற்பனைக்கு காட்சிப்படுத்த அனுமதிக்க வேண்டும்; பிறந்த நாளன்று, அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த வரும் மாற்றுத் திறனாளிகள், பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செந்தமிழ்செல்வி, நிரஞ்சன் விஜயன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி பேசியதாவது:
அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் என, அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

தனிப்பட்ட வெளியீட்டாளரின் புத்தகங்களை காட்சிப்படுத்துவதற்கான அனுமதியை அரசு வழங்குவதில்லை. அவ்வாறு அனுமதி வழங்கும் பட்சத்தில், பல வெளியீட்டாளர்கள் தங்கள் வெளியீடுகளை விற்பனை செய்ய, இடம் ஒதுக்கக் கோரும் சூழ்நிலையை உருவாக்கும்.

மணி மண்டபத்தில் உள்ள நுாலகத்தில், மனுதாரர்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்த அனுமதி கோரி, சம்பந்தப்பட்ட துறையிடம் விண்ணப்பிக்கலாம். பரிசீலனைக்கு பின், புத்தக வாசிப்பாளர்கள் பயன் பெறும் வகையில், நுாலகத்தில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:


அம்பேத்கர் பிறந்த நாளில், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் பங்கேற்பர். அப்போது, சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதோடு, பொது மக்களுக்கு தேவையான போதிய அடிப்படை வசதிகளை, அரசு செய்து தர வேண்டும்.

விழாவில் பங்கேற்கும் பொது மக்களுக்கு, எந்தவித அசவுகரியமும் ஏற்படாமல் இருக்க, குடிநீர் உட்பட இதர அடிப்படை வசதிகளை, அதிகாரிகள் செய்து தருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

புத்தகங்களை காட்சிப்படுத்த தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கை, அரசின் நிர்வாக முடிவாகும்.

எனவே, மனுதாரர்கள் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது. மனுதாரர்கள் தங்களின் புத்தகங்களை நுாலகத்தில் காட்சிப்படுத்துவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கலாம்.

அவற்றை, நடைமுறைகளை பின்பற்றியும், பொது நலனை கருத்தில் வைத்தும் அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us