Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ புத்தாண்டில் புதிதாய் ஒரு துவக்கம்... சிறகுகள் விரிக்கட்டும் உங்கள் குழந்தைகள்

புத்தாண்டில் புதிதாய் ஒரு துவக்கம்... சிறகுகள் விரிக்கட்டும் உங்கள் குழந்தைகள்

புத்தாண்டில் புதிதாய் ஒரு துவக்கம்... சிறகுகள் விரிக்கட்டும் உங்கள் குழந்தைகள்

புத்தாண்டில் புதிதாய் ஒரு துவக்கம்... சிறகுகள் விரிக்கட்டும் உங்கள் குழந்தைகள்

UPDATED : நவ 04, 2024 12:00 AMADDED : நவ 04, 2024 09:48 AM


Google News
கைக்குள் உலகை கொண்டுவந்து விட்ட ஸ்மார்ட்போன்களால் பல நல்ல பழக்கங்களை நாம் மறந்துவிட்டோம். அதில் முக்கியமானது, டைரிஎழுதும் பழக்கம். வரும் புதிய ஆண்டில், உங்கள் குழந்தைகளுக்கு டைரியை பரிசளித்து, டைரி எழுதும் பழக்கத்தை கற்றுக்கொடுங்கள்.

கையெழுத்தை மேம்படுத்துவது முதல் மன அழுத்தத்தை குறைப்பது வரை, டைரி எழுதுவது குழந்தைகளுக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் கோவை தனியார் பள்ளி ஆசிரியை உஷா...

கையெழுத்தை மேம்படுத்துகிறது


குழந்தைகள் தனியாக கையெழுத்துப் பயிற்சிகளை செய்யத் தயங்குவார்கள். டைரி எழுதும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளும் குழந்தைகளின் கையெழுத்து மேம்படுகிறது. குழந்தைகள் எவ்வளவு அதிகமாக எழுதுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்களின் கையெழுத்து மேம்படும்.

எழுத்து திறனை வளர்க்கிறது


ஏதேனும் ஒரு தலைப்பில் எழுதச் சொன்னால், வார்த்தைகள், வாக்கியங்களை உருவாக்க முடியாமல் குழந்தைகள் சிரமப்படுவார்கள். டைரி எழுதும் பழக்கம், எண்ணங்களை எப்படி வார்த்தைகளாக மாற்ற வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. இதன்மூலம், அவர்களின் எழுதும் திறன் மேம்படுகிறது.

படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது



எழுதுவதற்கு குழந்தைகள் சிந்திக்க வேண்டும். அவர்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் செயலாக்கம் செய்து, அவற்றை காகிதத்தில் எழுதுவதற்கு ஏற்ப பொருத்தமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். டைரி எழுதும் பழக்கம் குழந்தையின் படைப்பாற்றல் திறனை அதிகரிக்கிறது.

ஆழமாகும் நினைவாற்றல்


மூன்று நாட்களுக்கு முன்பு இரவில் என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்பது நினைவிருக்கிறதா? பெரும்பாலானவர்களிடம் பதில் இருக்காது. நீங்கள் இதை டைரியில் குறிப்பிட்டிருந்தால், நிச்சயம் மறந்திருக்காது. எழுதும் போது அதை முக்கியமாக கருதும் மூளை, அதிக நேரம் சேமித்து வைக்கிறது. டைரி எழுதுவதன் மூலம், குழந்தைகள் ஆழமான நினைவாற்றலை பெறுகின்றனர்.

உணர்ச்சி முதிர்ச்சி


உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வது முக்கியமான வாழ்க்கைத் திறனாகும். டைரி எழுதுவதன் மூலம் குழந்தைகள் தங்கள் எண்ணங்களை செயல்படுத்தவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் கற்கின்றன. உணர்ச்சிகளை அடக்காமல், அவற்றை அறிந்து, எப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம் என அறிந்துகொள்கின்றனர்.

மன ஆரோக்கியத்திற்கு



பள்ளி குழந்தைகளிடமே இன்று மனஅழுத்த பிரச்னைகள் அதிகரிக்கிறது. மறைந்திருக்கும் உணர்ச்சிகள், கவலைகளை ஒரு தாளில் எழுதுவது எண்ண சுழற்சிகளிலிருந்து விடுபட்டு, மனதை லேசாக்கும். தினசரி நம் வாழ்வை பதிவு செய்வது, நம்மை நாமே சுய பரிசோதனை செய்ய மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகள் சிறுவயதிலிருந்து டைரி எழுதும் போது, ஆரோக்கியமான மன நலனை பெறுகின்றனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us