Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்கள் 35 சதவீதம் அதிகரிப்பு

அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்கள் 35 சதவீதம் அதிகரிப்பு

அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்கள் 35 சதவீதம் அதிகரிப்பு

அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்கள் 35 சதவீதம் அதிகரிப்பு

நவ 16, 2023 12:00 AMநவ 16, 2023 12:00 AM


Google News
ஆண்டுதோறும், ஓப்பன் டோர்ஸ் ரிப்போர்ட் வாயிலாக, அமெரிக்க கல்வி சார்ந்த விரிவான புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. 
அவ்வாறு வெளியிட்டப்பட்ட அறிக்கையின் படி, கடந்த 1948-49ம் ஆண்டில் 25 ஆயிரத்து 464 சர்வதேச மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். 2022-23ம் ஆண்டில் 10 லட்சத்து 57 ஆயிரத்து 188 சர்வதேச மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 11.5 சதவீதம் அதிகமாகும். இதுவே, பல்வேறு படிப்புகளுக்காக 2021-22ம் ஆண்டில் பிற நாடுகளுக்கு சென்ற அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 753 ஆக உள்ளது.
இந்தியா டாப்
கடந்த 2021-22ம் ஆண்டில் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 182 இந்திய மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற நிலையில், 2022-23ம் ஆண்டில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 923 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, அமெரிக்க செல்லும் சர்வதேச மாணவர்களின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா 2து இடத்தில் உள்ளது. சீனா, 2 லட்சத்து 89 ஆயிரத்து 526 மாணவர்களின் எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது. என்றபோதிலும், மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பில் மற்ற அனைத்து நாடுகளையும் விட, 35 சதவீதம் உயர்வுடன் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது.
அமெரிக்கா சென்ற சர்வதேச மாணவர் எண்ணிக்கையில், 43 ஆயிரத்து 847 உடன் தென் கொரியா மூன்றாவது இடத்திலும், 27 ஆயிரத்து 876 மாணவர் எண்ணிக்கையுடன் கனடா 4வது இடத்திலும், 21 ஆயிரத்து 900 மாணவர் எண்ணிக்கையுடன் வியட்நாம் 5வது இடத்திலும் உள்ளது. 10 ஆயிரத்து 659 மாணவர் எண்ணிகையுடன் இங்கிலாந்து 15 வது இடத்திலும், 5 ஆயிரத்து 867 மாணவர் எண்ணிக்கையுடன் ஹாங்காங் 25வது இடத்திலும் உள்ளது.
விருப்பமான துறை
இளநிலை பட்டப்படிப்புகளில் 31 ஆயிரத்து 954 மாணவர்களும், முதுநிலை பட்டப்படிப்புகளில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 936 மாணவர்களும் இந்திய மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் கணிதம் சார்ந்த படிப்புகளை மட்டும் 41 சதவீத மாணவர்கள், அதாவது, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 796 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இன்ஜினியரிங் துறையை 72 ஆயிரத்து 340 பேரும், மேலாண்மை துறையை 31 ஆயிரத்து 195 பேரும், லைப் சயின்சஸ் துறையை 15 ஆயிரத்து 59 பேரும் தேர்வு செய்துள்ளனர். இவற்றில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி நிலை படிப்புகள் அடங்கும்.
ஆராய்ந்து சேருங்கள்
அமெரிக்க துணை தூதர் கிரிஸ்டோபர் ஹாட்ஜ்ஸ் கூறுகையில், அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 35 சதவீதம் அதிகரித்திருப்பது, இரு நாடுகளுக்கு இடையேயான சிறந்த நல்லுறவை காட்டுகிறது. மேலும், அமெரிக்க கல்வி நிறுவனங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் கல்வி அறிவோடு, பல்வேறு சவாலான பிரச்னைகளுக்கும் தீர்வு காண ஊக்குவிக்கப்படுகின்றனர். 
இந்திய -அமெரிக்க நாடுகளுக்கு இடையே பல்வேறு கல்வி பரிமாற்ற திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படும் நிலையில், இந்திய மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறை மற்றும் கல்லூரியை கவனமாக ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு அத்தகைய உதவி அளிக்கவே, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக வளாகத்தில் யு.எஸ்.ஐ.இ.எப்., எனும் அமெரிக்க- இந்திய கல்வி அறக்கட்டளை செயல்படுகிறது. அவற்றில் அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது, என்றார்.
-சதீஷ்குமார் வெங்கடாசலம்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us