'யங் இந்தியன் நிறுவனம் காங்கிரசின் மற்றொரு முகம்' நீதிமன்றத்தில் ஈ.டி., தகவல்
'யங் இந்தியன் நிறுவனம் காங்கிரசின் மற்றொரு முகம்' நீதிமன்றத்தில் ஈ.டி., தகவல்
'யங் இந்தியன் நிறுவனம் காங்கிரசின் மற்றொரு முகம்' நீதிமன்றத்தில் ஈ.டி., தகவல்
ADDED : ஜூலை 04, 2025 12:58 PM
புதுடில்லி: 'காங்கிரசின் நிழலை தவிர்க்கவே யங் இந்தியன் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இது, அக்கட்சியின் மற்றொரு முகம்' என, சிறப்பு நீதிமன்றத்தில் ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை தெரிவித்தது.
'நேஷனல் ஹெரால்டு' என்ற பத்திரிகையை, 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனம் நடத்தி வந்தது. இந்நிறுவனத்துக்கு, காங்., 90 கோடி ரூபாய் கடன் வழங்கியது. 2010ல், 'யங் இந்தியன்' என்ற நிறுவனம் துவங்கப்பட்டது. இதில், சோனியா, ராகுல் உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ளனர். காங்., வழங்கிய கடனுக்காக, 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் பங்குகள், 'யங் இந்தியன்' நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இதில், பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வரும் நிலையில், ராகுல், சோனியா உள்ளிட்டோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று, சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு கூறியதாவது:
'யங் இந்தியன்' நிறுவனம் காங்., கட்சியின் மற்றொரு முகம். அக்கட்சியின் வெளிச்சத்தை தவிர்ப்பதற்காக இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்கள் மரணமடைந்து விட்டதால், ராகுல், சோனியா ஆகியோர், 100 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இதில், 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனம் மட்டும் ஏமாற்றப்படவில்லை. காங்கிரசும் தான் ஏமாற்றப்பட்டு உள்ளது. போதுமான ஆதாரங்கள் இருந்தால் இந்த வழக்கில் காங்., கட்சியையும் குற்றஞ்சாட்டலாம். சோனியா, ராகுல் ஆகியோரின் மோசடி முடிவுகளால், 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் பங்குதாரர்கள் நுாற்றுக்கணக்கான கோடி ரூபாயை இழந்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.