Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஜாமினில் வந்தாலும் கெஜ்ரிவால் சாதிப்பாரா? காத்திருக்கும் சவால்கள்

ஜாமினில் வந்தாலும் கெஜ்ரிவால் சாதிப்பாரா? காத்திருக்கும் சவால்கள்

ஜாமினில் வந்தாலும் கெஜ்ரிவால் சாதிப்பாரா? காத்திருக்கும் சவால்கள்

ஜாமினில் வந்தாலும் கெஜ்ரிவால் சாதிப்பாரா? காத்திருக்கும் சவால்கள்

ADDED : ஜூன் 24, 2024 12:25 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்தாலும், பொது வாழ்க்கையில் அவர் ஆட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 21ல் கைது செய்தனர். லோக்சபா தேர்தலுக்காக இடைக்கால ஜாமினில் வந்த கெஜ்ரிவால், கடந்த 2ம் தேதி முதல் மீண்டும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு கடந்த 20ல் ஜாமின் அளித்தது. அதற்கு டில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, அவர் வெளியே வருவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சிறையில் இருந்தபடியே ஆட்சி செய்து வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்தாலும், அவர் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

அவப்பெயர்:


மதுபான கொள்கை முறைகேடு வழக்கு, ஆளும் ஆம் ஆத்மிக்கு டில்லியில் கடும் நெருக்கடியை கொடுத்துள்ள சூழலில், ஜாமினில் வெளியே வரும் கெஜ்ரிவால், அதை சமாளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். தன் கட்சி மீதான அவப்பெயரை துடைப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

சட்டசபை தேர்தல்:


டில்லி சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கவுள்ள நிலையில், கட்சி மீதும், ஆட்சி மீதும் ஏற்பட்டுள்ள அதிருப்தியை தீர்க்கும் பொறுப்பு கெஜ்ரிவாலின் தோள்களில் ஏறியுள்ளது. கடந்த இரண்டு முறை நடந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, அடுத்த தேர்தலிலும் அதே வெற்றியை ருசிப்பதற்கான பணிகளை அவர் செய்ய வேண்டும்.

தண்ணீர் தட்டுப்பாடு:


கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தத்தளித்து வரும் டில்லி மக்களின் நீர் தேவையை உணர்ந்து, அதற்கான பணிகளையும் கெஜ்ரிவால் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டில்லி மேயர் தேர்தல் கடந்த ஏப்., 26ல் நடக்கவிருந்த நிலையில், கெஜ்ரிவாலின் சிறைவாசத்தால் அது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தை முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் வாயிலாக மட்டுமே அணுக முடியும் என சட்டம் சொல்வதால், அதை சரிசெய்யும் கடமையும் கெஜ்ரிவால் முன் உள்ளது.

உதவி தொகை:


கெஜ்ரிவால் சிறை செல்லும் முன், 'முக்கிய மந்திரி மகிளா சம்மன் யோஜனா' எனப்படும், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை மாநில அமைச்சர் ஆதிஷி அறிவித்தார். அடுத்த ஆண்டு முதல், அது வழங்கப்படுவதற்கான வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்ட போது, கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது, அவர் ஜாமினில் வெளியே வந்தால், அந்த திட்டத்திற்கான பணிகளும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கவர்னருடன் மோதல்:


டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனாவுடன் தொடரும் மோதல் போக்கின் நடுவே, இத்தகைய சவால்களை முறியடிக்க கடுமையாக கெஜ்ரிவால் உழைத்தாலும், அவ்வப்போது வழக்குகள் தொடர்பாக நீதிமன்ற வாசல்களையும் அவர் மிதிக்க வேண்டி வரும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது சிறப்பு நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us