Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/முகவரியை எளிதாக கண்டுபிடிக்க மத்திய அரசின் சூப்பர் திட்டம்; ஒவ்வொரு வீட்டுக்கும் வருகிறது DIGIPIN

முகவரியை எளிதாக கண்டுபிடிக்க மத்திய அரசின் சூப்பர் திட்டம்; ஒவ்வொரு வீட்டுக்கும் வருகிறது DIGIPIN

முகவரியை எளிதாக கண்டுபிடிக்க மத்திய அரசின் சூப்பர் திட்டம்; ஒவ்வொரு வீட்டுக்கும் வருகிறது DIGIPIN

முகவரியை எளிதாக கண்டுபிடிக்க மத்திய அரசின் சூப்பர் திட்டம்; ஒவ்வொரு வீட்டுக்கும் வருகிறது DIGIPIN

Latest Tamil News
புதுடில்லி: ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தனித்துவமான 12 இலக்கு குறியீடுடன் கூடிய டிஜிட்டல் முகவரியை கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனித்துவமான அடையாளச் சான்று என்பது அவசியம். அதற்காகவே பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டது தான் ஆதார் அட்டை. அதிகாரப்பூர்வ அடையாள சான்றாக அறிவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எப்படி ஒரு மனிதனின் தனித்துவ அடையாளமாக ஆதார் உள்ளதோ அதுபோன்ற ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்துவமான முகவரியை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. ஒரு ஆதார் போன்று, இனி ஒவ்வொரு வீட்டுக்கும் டிஜிட்டல் முகவரியை கட்டமைக்க வேண்டும் என்பதே இதன் மையப்புள்ளி எனலாம்.

ஆதார் எண்ணை போல DIGIPIN எனப்படும் 12 இலக்கு குறியீடு இந்த முகவரியில் இருக்கும். முழுக்க, முழுக்க ஜிபிஎஸ் அடிப்படையிலான துல்லியமாக ஒரு வீட்டின் அல்லது ஒரு இடத்தின் முகவரியை கண்டறிய உதவுவதே இதன் நோக்கம்.

தனித்துவமான டிஜிட்டல் ஐ.டி., 53 ஆண்டுகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பின்கோடு எனப்படும் அஞ்சலக அடையாள எண்ணின் மறுவடிவம் என குறிப்பிடலாம். எப்படி ஒரு பின்கோடு மூலம் எந்த பகுதிக்கு ஒரு கடிதம் அனுப்பப்படுகிறது என்பதை அடையாளம் காண்பது போல டிஜிட்டல் ஐடி அமைக்கப்படும்.

இதற்காக தபால்துறை சார்பில் பூகோள ரீதியான தரவுகளைக் கொண்டு டிஜிட்டல் முகவரிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் அண்மையில் தொடங்கப்பட்டு உள்ளது. ஒரு பகுதியை மட்டும் குறிப்பிடும் பின்கோடு போல், ஒரு வீட்டையோ அல்லது அலுவலகத்தையோ குறிக்கும் தனித்துவமான, துல்லியான அடையாள நடைமுறை என்று மூத்த அஞ்சலக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நடைமுறையானது, இஸ்ரோ, ஹைதராபாத் ஐ.ஐ.டி., மற்றும் தேசிய தொலையுணர்வு மையம் (National Remote sensing center)பங்களிப்பின் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டில் எண்(DIGIPIN) மொத்தம் 12 இலக்கு குறியீடுடன் இருக்கும். ஒவ்வொரு தனி நபருக்கும் பிரத்யேக அல்லது தனித்துவ அடிப்படையில் வழங்கப்படும்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

டிஜிட்டல் முகவரியின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. எதிர்காலத்தில் அனைத்து தரப்பினராலும் அறியப்படும். அப்போது ஒருவர் தனது பெயர் மற்றும் வீட்டு எண்ணுடன் டிஜிட்டல் எண்ணை மட்டுமே தந்தால் போதும். அவரின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட வேண்டிய தபால் உள்ளிட்ட அனைத்தும் அனுப்பப்பட்டு விடும்.

தொலைதூரங்களில் வசிக்கும் மற்றும் வீட்டு இலக்கம் இல்லாத குடியிருப்புவாசிகளுக்கு இந்த நடைமுறை மிகவும் உதவிகரமாக இருக்கும். குறிப்பாக மலைபிரதேசங்களில் உள்ளவர்களின் வீடு மற்றும் முகவரியை கண்டுபிடிக்கும் போது ஏற்படும் கடும் நெருக்கடிகள் மற்றும் சிரமங்களுக்கு DIGIPIN நடைமுறை தீர்வாக அமையும்.

இது தவிர அரசின் நலத்திட்டங்கள், பயன்கள் சம்பந்தப்பட்ட நுகர்வோர்களுக்கு முறையாக சென்றுவிட்டதா என்பதையும் அறிய முடியும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us