Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தமிழகத்தில் மொழியால் மக்களிடையே வேற்றுமையை உருவாக்குகின்றனர்: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தமிழகத்தில் மொழியால் மக்களிடையே வேற்றுமையை உருவாக்குகின்றனர்: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தமிழகத்தில் மொழியால் மக்களிடையே வேற்றுமையை உருவாக்குகின்றனர்: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தமிழகத்தில் மொழியால் மக்களிடையே வேற்றுமையை உருவாக்குகின்றனர்: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ADDED : டிச 03, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
''தமிழகத்தில் குறுகிய அரசியல் எண்ணத்துடன், அரசியல் லாபத்துக்காக மொழியை வைத்து மக்களிடையே வேற்றுமையை உருவாக்கி வருகின்றனர்,''என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் காசி மற்றும் தமிழகத்தின் ஆன்மிக கலாசார தொடர்புகளை பிரதிபலிக்கும் வகையில், 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, நான்காம் ஆண்டு சங்கமம் நிகழ்ச்சி உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் நேற்று துவங்கியது.

'தமிழ் கற்போம்' என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் துவக்கி வைத்தனர். வரும் 15ம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இதில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: தமிழகத்தில் மொழியை வைத்து வேற்றுமையை உருவாக்கி வருகின்றனர். குறுகிய அரசியல் எண்ணத்துடன், அரசியல் லாபத்துக்காக இதை செய்கின்றனர்.

ஆண்டுதோறும் காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்கும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி வருகிறேன். மீண்டும் அவரை அழைக்கிறேன். காசிக்கு வந்து பாருங்கள். தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள நீண்டகால தொடர்பு உங்களுக்கு தெரியவரும். அதை நாங்கள் எவ்வாறு கொண்டாடுகிறோம் என்பதை அறிய முடியும்.

மொழி பாகுபாடு எங்களிடம் இல்லை. சுயநல சக்திகள்தான் மொழியை வைத்து உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர். இது, அரசியலில் வேண்டுமானால் கை கொடுக்கலாம்; ஆனால், மக்களிடம் நன்மதிப்பை பெற்று தர முடியாது. இந்த நிகழ்ச்சி மூலமாக தமிழகத்துக்கும் , காசிக்கும் இடையே அறிவுப் பாலத்தை உருவாக்கிஉள்ளோம்.

பன்மொழி கலாசாரம்


நம் நாட்டின் பலம் என்பதை உறுதியாக நம்புகிறோம். ஆங்கிலேய மோகத்தில் இருந்து வெளியேற மொழிதான் முக்கிய காரணியாக இருந்தது. அதனால் தாய்மொழி மட்டுமல்ல இந்திய மொழிகள் அனைத்தையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதன்படி உ.பி., மக்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் முருகன், சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்காக, தமிழகத்தில் இருந்து, 500 பேர் சிறப்பு ரயில் மூலம் காசி அழைத்து வரப்பட்டனர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us