வளர்ப்பு நாயின் புத்திசாலித்தனம்: சிறுத்தையிடம் உயிர் தப்பிய மக்கள்: நடந்தது என்ன?
வளர்ப்பு நாயின் புத்திசாலித்தனம்: சிறுத்தையிடம் உயிர் தப்பிய மக்கள்: நடந்தது என்ன?
வளர்ப்பு நாயின் புத்திசாலித்தனம்: சிறுத்தையிடம் உயிர் தப்பிய மக்கள்: நடந்தது என்ன?
ADDED : ஜூலை 09, 2024 05:30 PM

பல்லாரி: வளர்ப்பு நாயால், கிரேனஹள்ளி கிராமத்தினர், சிறுத்தையிடம் இருந்து உயிர் தப்பினர்.
கர்நாடகா மாநிலம், பல்லாரி சன்டூரின் சோரநுார் பேரூராட்சிக்கு உட்பட்ட கிரேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஹொன்னுார சாமி. இவர் கிராமத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார். இவரது வளர்ப்பு நாய், பண்ணை முன் திண்ணையில் படுத்திருந்தது. அங்கு வந்த சிறுத்தை, நாயை பிடிக்க முயற்சித்தது. உஷாரான நாய், சிறுத்தையிடம் இருந்து தப்பி, மின்னல் வேகத்தில், கிராமத்துக்குள் ஓடி வீட்டுக்கு வந்தது.
எப்போதும் வீட்டுக்கு வராத நாய், இன்று இவ்வளவு வேகமாக ஓடி வந்ததை பார்த்து, ஹொன்னுார சாமி, ஆச்சரியமடைந்தார். பண்ணையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் கிராமத்தினரிடம் விஷயத்தை கூறி, பண்ணைக்கு சென்றபோது சிறுத்தையை காணவில்லை. பண்ணையில் இருந்த ஆடுகள், கிடாக்கள், எருமைகளை தாக்கவில்லை.
சிறுத்தை நடமாட்டம் குறித்து, கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஊழியர்களும் கூண்டு வைக்க ஏற்பாடு செய்து உள்ளனர். வளர்ப்பு நாயின் எச்சரிக்கையால், கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்தது தெரிந்தது. மக்கள் உஷாராகினர். இல்லையென்றால் சிறுத்தையின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்க வேண்டும்.