காட்டில் தவித்த பழங்குடியின குழந்தைகளை மீட்ட வனக்குழு
காட்டில் தவித்த பழங்குடியின குழந்தைகளை மீட்ட வனக்குழு
காட்டில் தவித்த பழங்குடியின குழந்தைகளை மீட்ட வனக்குழு
UPDATED : ஆக 03, 2024 01:23 PM
ADDED : ஆக 03, 2024 12:47 PM

பந்தலூர்: வயநாடு காட்டில் தவித்த பழங்குடியின குழந்தைகளை மீட்ட வனக்குழுவினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சூரல்மலை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் சிக்கி சின்னாபின்னமானது. இதில் அட்டமலை வனப்பகுதியில் பழங்குடியின கிராமங்கள் அமைந்துள்ளது. இதில் ஏராட்டுக்குன்னு என்ற இடத்தை சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் சாந்தா இருவரும் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு, வனத்திற்குள் சென்றுள்ளனர்.
அன்று இரவு நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் கிருஷ்ணன், சாந்தா இருவரும் தங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் வனப்பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர். வனத்துறையினர் அவர்களை மீட்டு முகாமுக்கு அழைத்து வந்த நிலையில், இவர்களின் குழந்தைகள் வனத்திற்குள் உள்ள குடிசை வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கல்பட்டா வனச்சரகர் ஆசிப் தலைமையிலான குழுவினர், சுமார் 7 கிலோமீட்டர் தூரம் உள்ள மலையில் செங்குத்தான பாதையில், கயிறு கட்டி நடந்து சென்று குழந்தைகளை மீட்டு முகாமுக்கு கொண்டு வந்தனர். அவர்களுக்கு பிஸ்கட் மற்றும் தண்ணீர் கொடுத்து கட்டி அணைத்து வனத்துறையினர் மீட்டுக் கொண்டு வந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.