அதிரடிப்படைகளை குவித்த வழக்கில் அதிபர் டிரம்புக்கு சாதகமாக உத்தரவு
அதிரடிப்படைகளை குவித்த வழக்கில் அதிபர் டிரம்புக்கு சாதகமாக உத்தரவு
அதிரடிப்படைகளை குவித்த வழக்கில் அதிபர் டிரம்புக்கு சாதகமாக உத்தரவு
ADDED : ஜூன் 14, 2025 02:36 AM

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், 4,000 அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டதை டிரம்ப் திரும்ப பெற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த உத்தரவுக்கு தடை விதித்து வழக்கை ஒத்தி வைத்தது.
அமெரிக்காவில், சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை கண்டறிந்து வெளியேற்றுவதில் அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். நாளொன்றுக்கு இதுபோன்ற நபர்கள் 3,000 பேரை கைது செய்ய குடியேற்ற அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் சமீபத்தில் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பலரை கைது செய்தனர். இதற்கு எதிராக போராட்டம் நடந்தது.
அப்போது போலீசார் மற்றும் குடியேற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் வாகனங்கள் மீது கற்கள், முட்டைகள் ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து கொண்டனர்.
இதையடுத்து அதிபர் டிரம்ப் 4,000 அதிரடிப்படை போலீசார் மற்றும் 700 ராணுவத்தினரை லாஸ் ஏஞ்சலஸில் குவிக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு சட்டவிரோதமானது என கலிபோர்னியா கவர்னர் காவின் நியூசம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அதிரடிப்படை போலீசாரை அதிபர் கட்டுப்படுத்துவது மாகாண அதிகாரத்தை பறிப்பதாகும் என கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சார்லஸ் பிரேயர், 'லாஸ் ஏஞ்சலஸில் நடந்த போராட்டங்களை கிளர்ச்சி என்று வகைப்படுத்த முடியாது.
'அதிரடிப்படை போலீசாரை அனுப்ப அதிபர் டிரம்ப் உத்தரவிட்டது செல்லாது. அவர்களை மீண்டும் கலிபோர்னியா மாகாண அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்' என உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அதிபர் டிரம்ப் சார்பில் ஒன்பதாவது அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அவர்கள் பெடரல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.