தமிழக மின் துறையில் ரூ.397 கோடி ஊழல்: 'டான்ஜெட்கோ' மீது டில்லியில் வழக்கு
தமிழக மின் துறையில் ரூ.397 கோடி ஊழல்: 'டான்ஜெட்கோ' மீது டில்லியில் வழக்கு
தமிழக மின் துறையில் ரூ.397 கோடி ஊழல்: 'டான்ஜெட்கோ' மீது டில்லியில் வழக்கு

தமிழகத்தில், 'டிரான்ஸ்பார்மர்' கொள்முதலில், 397 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, 'டான்ஜெட்கோ' எனப்படும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோகக் கழகத்திற்கு எதிராக இந்திய போட்டி ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவராமன் என்பவர், டில்லியில் உள்ள இந்திய போட்டி ஆணையத்தில் கொடுத்துள்ள புகார்:
தமிழக மின் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, 1,182 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்வதற்காக, 10 டெண்டர்கள் கோரப்பட்டன.
அரசுக்கு இழப்பு
அதில், ஏழு டெண்டர்களில், 26,300 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில், 397 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு, 500 கிலோவாட் திறனுடைய 800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ய, 2021 நவம்பர் மாதம் 'டெண்டர்' கோரியது.
இதில் பங்கேற்ற, 26 ஒப்பந்ததாரர்களும் ஒரே மாதிரியாக, 13 லட்சத்து, 72 ஆயிரத்து, 930 ரூபாய் என ஒரு மின்மாற்றியின் டெண்டர் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து சமர்ப்பித்துஉள்ளனர்.
இது முறைகேடு நடந்துள்ளதை தெளிவாக்குகிறது.
மேலும், 26 ஒப்பந்ததாரர்களில், 16 பேருக்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதுடன், சந்தை விலையை விட கூடுதலாக நிர்ணயித்து கொடுக்கப்பட்டதால் அரசுக்கு, 397 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை
எனவே இந்த விவகாரத்தில், 'டான்ஜெட்கோ' மீதும் முறைகேடாக ஒப்பந்தம் கோரிய ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த, 2023ல் இதே புகார் எழுந்த போது அதை, 'டான்ஜெட்கோ' நிறுவனம் முழுமையாக மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது
- டில்லி சிறப்பு நிருபர் -.