Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/யூடியூப் பார்த்து தங்கத்தை மறைக்கக் கற்றேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்

யூடியூப் பார்த்து தங்கத்தை மறைக்கக் கற்றேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்

யூடியூப் பார்த்து தங்கத்தை மறைக்கக் கற்றேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்

யூடியூப் பார்த்து தங்கத்தை மறைக்கக் கற்றேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்

UPDATED : மார் 13, 2025 04:23 PMADDED : மார் 13, 2025 12:23 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: 'யூடியூப்பில் இருந்து தங்கத்தை மறைக்கக் கற்றுக்கொண்டேன், இதற்கு முன்பு ஒருபோதும் கடத்தியதில்லை' என அதிகாரிகளிடம் ரன்யா ராவ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், சிக்கமகளூரைச் சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ், 34. கர்நாடக போலீஸ் குடியிருப்பு மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி கழக ஏ.டி.ஜி.பி., ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள். இவர், கடந்த 3ம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில், 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான 14.80 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்தார். இவரை, விமான நிலையத்தில், டில்லி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.



இவர், தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி கடத்தியதும் விசாரணையில் அம்பலமானது. தான் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டது குறித்தும், தங்கத்தை கடத்தியது குறித்தும், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளிடம் ரன்யா ராவ் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறிய விவரம் பின்வருமாறு: மார்ச் 1ம் தேதி எனக்கு ஒரு வெளிநாட்டு தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

கடந்த இரண்டு வாரங்களாக தெரியாத வெளிநாட்டு எண்களிலிருந்து எனக்கு அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. துபாய் விமான நிலையத்தின் முனையம் 3ல் உள்ள கேட் A க்குச் செல்லுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது. துபாய் விமான நிலையத்தில் தங்கத்தை சேகரித்து பெங்களூருவில் டெலிவரி செய்யுமாறு என்னிடம் கூறப்பட்டது. துபாயிலிருந்து பெங்களூருக்கு தங்கத்தை கடத்தியது இதுவே முதல் முறை.

இதற்கு முன்பு நான் துபாயிலிருந்து தங்கத்தை கொண்டு வந்ததோ வாங்கியதோ இல்லை. யூடியூப்பில் இருந்து தங்கத்தை மறைக்கக் கற்றுக்கொண்டேன். விமான நிலையத்தில் இருந்து பேண்டேஜ்கள் மற்றும் கத்தரிக்கோல்களை வாங்கி, விமான நிலையத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் தங்கக் கட்டிகளை தனது உடலில் மறைத்து வைத்தேன். தங்கம் இரண்டு பிளாஸ்டிக் மூடிய பாக்கெட்டுகளில் இருந்தது.

என்னை தொலைபேசியில் அழைத்தது யார் என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. தங்கக் கட்டிகளை தன்னிடம் ஒப்படைத்த பிறகு அவர் உடனடியாக வெளியேறினார். நான் அவரை மீண்டும் சந்தித்ததில்லை, பார்த்ததில்லை. அந்த நபர் சுமார் 6 அடி உயரமும், வெள்ளை நிறமும் கொண்டவர். சிக்னலுக்கு அருகில் உள்ள ஒரு ஆட்டோரிக்ஷாவில் தங்கத்தை வைக்க வேண்டும் என்றனர்.

நான் அதிக முறை, துபாய்க்கு புகைப்படம் எடுத்தல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக பயணம் செய்தேன். ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பலமுறை பயணம் சென்றுள்ளேன். இவ்வாறு அதிகாரிகளிடம் ரன்யா ராவ் விளக்கம் அளித்தார். அதே நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் யார் என்ற விபரத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us