Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பஞ்சாப் கனமழை; 29 பேர் பலி, 2.5 லட்சம் பேர் பாதிப்பு

பஞ்சாப் கனமழை; 29 பேர் பலி, 2.5 லட்சம் பேர் பாதிப்பு

பஞ்சாப் கனமழை; 29 பேர் பலி, 2.5 லட்சம் பேர் பாதிப்பு

பஞ்சாப் கனமழை; 29 பேர் பலி, 2.5 லட்சம் பேர் பாதிப்பு

ADDED : செப் 02, 2025 06:46 AM


Google News
Latest Tamil News
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பெய்து கனமழையால், 29 பேர் உயிரிழந்தனர். மேலும் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ள பாதிப்பு குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் இடம் தொலைபேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

ஹிமாச்சலப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, சட்லஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பஞ்சாப் பெரும் வெள்ளப்பெருக்கை சந்தித்து வருகிறது.

மேலும் வெள்ளத்தால், குருதாஸ்பூர், பதான்கோட், பாசில்கா, கபுர்தலா, பெரோஸ்பூர், ஹோஷியார்பூர் உள்ளிட்ட கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கும் செப்டம்பர் 3ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி ஒரு மாதத்தில் மாநிலத்தில் உள்ள 23 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது பல தசாப்தங்களில் பஞ்சாபைத் தாக்கிய மிக மோசமான வெள்ளப் பேரழிவுகளில் ஒன்றாகும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக இதுவரை 29 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக பதான்கோட் மாவட்டத்தில், 2.56 லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை, மாநிலம் முழுவதும் 15,688 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வெள்ளம் 1,044 கிராமங்களை பாதித்துள்ளது. வெள்ளத்தால் மொத்தம் 2,56,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல மாவட்டங்களில் மொத்தம் 96,061 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் 24 மணி நேரமும் களத்தில் வேலை செய்து வருகின்றனர். பதன்கோட், குர்தாஸ்பூர், அமிர்தசரஸ், பெரோஸ்பூர், பாசில்கா மற்றும் பதிண்டா மாவட்டங்களில் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

துணை நிற்போம்

வெளிநாட்டு பயணத்தை முடித்து டில்லி திரும்பிய பிரதமர் மோடி, பஞ்சாப் முதல்வருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள், சேத விவரம், மீட்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். அவர் மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என உறுதி அளித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us