கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புளுட்டோனியம் பயன்படுத்த அனுமதி
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புளுட்டோனியம் பயன்படுத்த அனுமதி
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புளுட்டோனியம் பயன்படுத்த அனுமதி
ADDED : ஜூலை 31, 2024 06:44 AM

புதுடில்லி: அணுசக்தி உற்பத்தியில் அடுத்த நிலைக்கு செல்லும் வகையில், அதிவேக ஈனுலையில் புளுட்டோனியம் பயன்படுத்துவதற்கு, கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு, அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.
நம் நாட்டில், தமிழகத்தின் கல்பாக்கத்தில், அதிகவேக ஈனுலை, 39 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில், அணுமின்சாரம் தயாரிக்க மூலப்பொருளாக யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு குறைவாக உள்ளது. அத்துடன், யுரேனியமும் மிகவும் குறைந்த அளவே கிடைத்து வருகிறது.
இந்நிலையில், இதற்கு மாற்றாக, தோரியம் என்ற அணு எரிசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. நம் நாட்டில் தோரியம் அபரிமிதமாக கிடைக்கிறது. அதற்கு முன்பாக, யுரேனியத்துக்கு மாற்றாக, புளுட்டோனியம் பயன்படுத்துவதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சிறப்பான பலன் அளித்தால், அதற்கடுத்து தோரியம் பயன்படுத்தப்படும்.
இதன் வாயிலாக, அடுத்த, 300 ஆண்டுக்கு அணுமின் உற்பத்தியில் எந்த நாட்டையும் சார்ந்திருக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு இருக்காது என, அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தினேஷ் குமார் சுக்லா தெரிவித்துள்ளார்.