காஷ்மீரில் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல்: ஒருவர் பலி
காஷ்மீரில் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல்: ஒருவர் பலி
காஷ்மீரில் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல்: ஒருவர் பலி
ADDED : மே 10, 2025 04:17 AM

ஜம்மு: இந்திய எல்லையோர மாநிலங்களின் மீது நேற்று முன்தினம் இரவு முதல், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜம்மு - காஷ்மீரிலும், எல்லை கட்டுப்பாடு கோட்டை ஒட்டிய பகுதிகளிலும், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் வாயிலாகவும், பீரங்கிகள் வாயிலாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3:50 முதல் 4:45 மணி வரை இடைவிடாது குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில், லோரன் பகுதியைச் சேர்ந்த முஹமது அப்ரார் என்பவர் உயிரிழந்தார்; அவரின் மனைவி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். குண்டு வீச்சில், அப்பகுதியில் உள்ள வீடுகள் சேதமடைந்தன; நுாற்றுக்கணக்கான வாகனங்கள் தீக்கிரையாகின.
வெடிச்சத்தம் கேட்டதை அடுத்து, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பாதுகாப்பு சைரன் ஒலிகள் எழுப்பப்பட்டன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஜம்மு மற்றும் ரஜோரி மாவட்டங்களிலும் குண்டுகள் வீசப்பட்டன; வீடுகள் மற்றும் முக்கிய அலுவலகங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. போர் பதற்றம் காரணமாக, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.