கொலை வழக்கில் தேடப்பட்டவர் 24 ஆண்டுகளுக்கு பின் கைது
கொலை வழக்கில் தேடப்பட்டவர் 24 ஆண்டுகளுக்கு பின் கைது
கொலை வழக்கில் தேடப்பட்டவர் 24 ஆண்டுகளுக்கு பின் கைது
ADDED : ஜூன் 02, 2025 01:34 AM
பால்கர்: மஹாராஷ்டிராவில் நடந்த கொலை சம்பவத்தில் தேடப்பட்ட குற்றவாளியை, 24 ஆண்டுகளுக்கு பின் உத்தர பிரதேசத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
மஹாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின் விரார் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் அலி, 46. இவர், அங்குள்ள ஆட்டோக்களில் வழக்கமாக பயணித்து வந்தார்.
கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி 14ல் அங்குள்ள ஆட்டோவில் பயணித்தார். இதற்கு, கட்டணம் அளிக்காமல் இப்ராஹிம் அலி சென்றார்.
இதனால், அவரிடம் ஆட்டோ டிரைவர் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பரும் இணைந்து இப்ராஹிம் அலியை, கூர்மையான ஆயுதத்தால் வயிற்றில் குத்தி தப்பியோடினர்.
தகவலறிந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட இப்ராஹிமை, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், விராரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ஹாரூன் அலி முஸ்தாகின் அலி சையது மற்றும் மாமூ என்கிற பாபுஹான் ஓம் பிரகாஷ் ஷிரிஷாகுனி திவாகர் ஆகியோர், இப்ராஹிம் அலியை கத்தியால் குத்தியதை கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து, ஹாரூன் அலியை போலீசார் கைது செய்த நிலையில், ஓம் பிரகாஷ் தலைமறைவானார். இதையடுத்து, தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்து, பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். எனினும், கடந்த 24 ஆண்டுகளாக அவர் சிக்கவில்லை.
இதற்கிடையே, தலைமறைவாக உள்ள ஓம் பிரகாஷின் மகன் மற்றும் உறவினர்களின், 'மொபைல் போன்' எண்ணை கண்காணித்து தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தினர். இதில், உத்தர பிரதேசத்தில் கான்பூர் மாவட்டத்தின் பாஹர்பூரில் ஓம் பிரகாஷ் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டறிந்து, சமீபத்தில் கைது செய்தனர்.