நாக்பூர் கலவரத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது
நாக்பூர் கலவரத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது
நாக்பூர் கலவரத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது

நாக்பூர்: நாக்பூரில் நடந்த கலவரம் தொடர்பாக உள்ளூரில் அரசியல் கட்சி நடத்தி வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி மாவட்டத்தில், முகலாய மன்னர் அவுரங்கசீபின் சமாதி உள்ளது. மராட்டிய மன்னர் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை தொடர்பான சாவா என்ற ஹிந்தி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில், சத்ரபதி சம்பாஜியை மதம் மாற்றம் செய்வதற்கு அவுரங்கசீப் முயன்று, கொடூரமாக கொலை செய்தது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து, அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில், அவுரங்கசீபை பெருமைப்படுத்தும் வகையில், முஸ்லிம் பிரிவினர் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாக்பூரில், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சார்பில் நேற்று முன்தினம்( மார்ச் 17) போராட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது முஸ்லிம்களின் புனித நுால் அவமதிக்கப்பட்டதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து, கல்வீசி தாக்குவது, வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் நடந்தன. ஒரு கட்டத்தில் போலீசார் மீதும், முஸ்லிம் தரப்பினர் தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தப்பட்டு, கூட்டத்தை போலீசார் கலைத்தனர்.
நாக்பூரில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து, அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 1,200 பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 200 பேரை அடையாளம் கண்டு 60 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணும் பணியில் மும்முரமாக உள்ளனர்.
இந்நிலையில், இந்த கலவரத்தை தூண்டியதாக பஹீன்கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர், அம்மாநிலத்தில் சிறுபான்மையினர் ஜனநாயக கட்சியை நடத்தி வருகிறார். மேலும், இந்த கலவரத்தை தனி நபர் தூண்டி விட்டாரா அல்லது ஏதேனும் அமைப்புக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.